ஆண்டுதோறும் டிசம்பர் 3ந் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐநாவால் அடையாளப்படுத்தப்படுகிறது. அன்று மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்த செயல்பாடுகள் நோக்கி கவனம் ஈர்ப்பதும் சமூகத்தில் விழிப்புணர்வைப் பரப்புவதுமே அதன் மைய நோக்கம். 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பரப்புவதை ஐநா தொடர்ந்து செய்து வருகிறது.

இவ்வருடத்திற்கான ஐநாவின் கருப்பொருள், மாற்றுத்திறனாளிகளை முழுமையாக உள்ளடக்கும் சமூகங்களை உருவாக்கி சமூக முன்னேற்றத்தை வேகப்படுத்த வேண்டும் என்பதாகும். இந்நாளின் நோக்கம், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை சமூகமாக புரிந்து கொள்வதும், அவர்களின் உரிமைகள், நலன், மாண்பு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் உருவாக்குவதும் ஆகும். அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை இணைப்பதன் மூலம் சமூகம் பெறும் பயன்களை பற்றிய விழிப்புணர்வையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.

பொது சமூகத்திலுள்ளோர் நாங்கள் இது குறித்த விழிப்புணர்வைப் பெற்றுவிட்டோம் என்று சொல்வதற்கு என்ன அடிப்படைத் தேவை? உண்மையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சிக்கல்கள் குறித்து நமக்கு ஒன்றுமே தெரியாது என்பதை ஒப்புக் கொள்வதுதான் அதற்கு முதல் படி. நான் சொல்வது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கக் கூடும். பதற்றப்படாது மெல்ல சிந்தியுங்கள். நீங்கள் சர்வ சாதாரணமாகச் செய்யும் ஒரு செயலை ஒரு மாற்றுத் திறனாளி செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்று உங்களால் எப்போதேனும் உணர முடிந்திருக்கிறதா? முதலில் எத்தனை வகையான மாற்றுத்திறன் கொண்டோர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையேனும் நமக்கு முழுமையாகத் தெரியுமா என்று சிந்தியுங்கள், நான் சொல்வதன் பொருள் தானாகவே புரிந்துவிடும்.

விழிப்புணர்வின் முதல் படியாக, இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் சிக்கல்களில் சிலவற்றையேனும் அறிமுகம் செய்து கொள்வோம்.

• வறுமைக்கு உள்ளாகும் அபாயம் அதிகம் – இவர்களது இயலாமைகளை முன்னிறுத்தி, இவர்களின் ஊதியத்தைப் பறிக்கும் அல்லது குறைக்கும் எண்ணற்ற காருண்ய வள்ளல்களின் கதை உலகறியாது. இத்துறையில் இயங்குவோருக்கு மட்டுமே இங்கு விருதும் பாராட்டும் பெறும் பல்வேறு புரவலர்களின் கோரமுகம் தெரியும். பொதுவில் இவர்களுக்கு உழைக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிது. அதனினும் அறிது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது. எனவே பலருக்கும் இங்கே வறுமை தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது.

• சுயமரியாதையை பாதிக்கும், மாண்பைக் குலைக்கும் சூழல்கள் – குடும்பங்களுக்குள்ளும் சரி, பணிச்சூழல், பொதுவெளி என எல்லா இடத்திலும் இவர்களின் சுயமரியாதையைச் சுரண்டிப் பார்ப்போர் அதிகம். ஆதரவு தருபவர்கள் குறைவு.

• பொதுவெளியை அணுகுவதில் சிக்கல்கள் – பொதுவெளியை அணுகத் தேவையான சாய்வு தளங்கள், ஒலி அறிவிப்புகள், ப்ரைலி , சைகை மொழியாக்கங்கள், தாழ்தள பேருந்துகள், போன்றவற்றை பெருநகரங்களில் கூட முழுமையாக எதிர்பார்க்க முடியாது.

• இவையெல்லாம் உடல் சார் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ள பொதுவான சிக்கல்கள்மட்டுமே. அடுத்த படிநிலையில் இருக்கும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களையும் சொல்லத் தொடங்கினால் இன்று ஒரு நாளுக்குள் முடியாது. அவர்களின் நடத்தை சிக்கல்களை சுற்றியுள்ளோர் புரிந்து கொள்வதற்கு இன்னமும் சிலபல ஆண்டுகள் ஆகும்.

விழிப்புணர்வின் இன்னொரு படியாக, கீழுள்ள இணையதளத்திற்குச் சென்று நாம் அனைவரும் டிசம்பர் 03-உலக மாற்றுத் திறனாளிகள் தின உறுதி மொழி எடுத்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

Share in your friends group and also post in social media. Lets spread awareness about it. Lets make an inclusive world for all.

https://elearn.tnschools.gov.in/cwsn-bilingual/KNNCN

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

ஒலியும் ஒளியும்

ஞாயிறு மாலை. அந்த வணிகப் பேரங்காடி வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. தேன் கூட்டை  மொய்க்கும் தேனீக்கள் போல அங்கு மனிதர்கள் கூடியிருந்தனர். கண்ணன், தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அந்த அங்காடியின் இரண்டாவது தளத்தில் நடந்து கொண்டிருந்தான். அவன் பதினொன்றாம் வகுப்பு மாணவன். கண்ணனின் அம்மா ஆனந்தி ஒரு வங்கியில் காசாளராகப் பணி புரிகிறார்.

தாயும் மகனும் இரண்டாவது தளத்திலிருந்த அந்தத் துணிக்கடைக்குள் நுழைந்தனர்.  கண்ணனை அங்கிருந்த துணி வரிசைகளை விடவும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முகமில்லாத உருவ பொம்மைகளே மிகவும் ஈர்த்தன. ஒவ்வொரு பொம்மையின் அருகிலும் சென்று அந்த பொம்மை அணிந்திருக்கும் உடையின் நிறங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் எல்லா பொம்மைகளையும் பார்த்து, அவற்றின் உடை நிறங்களைச் சொல்லி முடித்த பின்னர் பொறுமையாகக் காத்திருந்த அம்மாவிடம் வந்தான்.

“என்ன கண்ணா, எல்லா பொம்மையோட டிரெஸ் கலரும் பார்த்தாச்சா? இனிமேலாவது உனக்கு டிரெஸ் எடுக்கப் போலாமா?”

“டிரெஸ் எடுக்கப் போலாமா”

”டிரெஸ் எடுக்கப் போகலாம் சொல்லு”

“டிரெஸ் எடுக்கப் போகலாம் சொல்லு”

“சரி வா” என்று அவனை அழைத்துக் கொன்டு அவன் வயதுக்குரிய உடைகள் அடுக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார் ஆனந்தி.

அவனுக்கு உரிய அளவிலான பல உடைகளை அணிவித்து சரி பார்த்து அதில்  அவனுக்கு பொருத்தமான இரண்டினைத் தேர்ந்தெடுத்தார் ஆனந்தி. அவற்றை எடுத்துக் கொண்டு, பணம் செலுத்துமிடத்தில் உரிய தொகையைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். பிறகு மீண்டும் கண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு கடையின் வாயிலுக்கு வந்தார். ஆனால் கண்ணனோ அம்மாவின் கையைப் பற்றி கடைக்குள் இழுத்தான்.

“ஏண்டா கண்ணா திரும்ப உள்ள போகணும்ன்ற? உனக்கான டிரெஸ்தான் எடுத்தாச்சே?”

மீண்டும் மீண்டும் அவரது கையை இழுத்தபடி, ”ம்ம்”  என்ற ஒலியோடு உடை அணிந்து பார்க்கும் அறையை நோக்கிக் கையைக் காட்டினான் கண்ணன்.  பிறகுதான் ஆனந்திக்கு வழக்கமாய் அவனது முதுகில் மாட்டும் பையை அங்கேயே மறந்துவிட்டுவிட்டோம் என்பது புரிந்தது. அந்தப் பையில்தான் அதீதமான ஒலியைக் கேட்க நேர்ந்தால் அதிலிருந்து அவனைக் காக்கும் ஒலி குறைக்கும் காது மாட்டியும்(noise cancellation earmuff) , அதீத ஒளியிலிருந்து காக்க ஒரு கருப்புக் கண்ணாடியும் எப்போதும் இருக்கும்.

“அம்மா, பையை மறந்துட்டேன். போய் எடுக்கலாம் வாங்கன்னு சொல்லணும் கண்ணா. சும்மா ம்ம்னா எனக்கு என்ன புரியும்? எங்க சொல்லு – அம்மா பையை மறந்துட்டேன், போய் எடுக்கலாம் வாங்க”

”பையை மறந்துட்டேன், போய் எடுக்கலாம் வாங்க.”

உள்ளே சென்று அந்தப் பையை எடுத்து அவனது முதுகில் மாட்டிவிட்டு, வெளியே அழைத்து வந்தார் ஆனந்தி. அவர்கள் கீழிறங்கிச் செல்வதற்கான தானியங்கி படிக்கட்டுகளை நோக்கி நடக்கும்போது, ஆனந்தி தன் கல்லூரித் தோழி சந்திரா எதிரில் வருவதைப் பார்த்தார். சந்திரா தானா என்று லேசான சந்தேகத்தோடு பார்த்தவரை, அந்தப் பக்கமிருந்து உற்சாகமாய் அருகில் வந்து கைகளைப் பற்றிக் கொண்டு ”ஹாய் ஆனந்தி! எப்படிடீ இருக்க?” என்று கேட்டார் சந்திரா.

“ஹாய்டி. பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு, நான் நல்லாருக்கேண்டி, நீ எப்படி இருக்க?”

“நானும் நல்லாருக்கேன். உனக்கு ஒரே பையன்தான் இல்ல? என்ன படிக்கிறான்?” என்றார் கண்ணனைப் பார்த்துக் கொண்டே.

இதற்குள் பேசிக் கொண்டே மூவரும் சற்று ஓரமாக வந்து நின்று கொண்டனர். ஓரமாக நிற்கிறோமே என்ற எண்ணத்தில் ஆனந்தி, கண்ணனின் கையை விட்டுவிட்டு, சந்திராவின் கேள்விக்கு பதில் சொன்னார்.

“ஆமா, இவன் மட்டும்தான். இப்ப ப்ளஸ் ஒன் போறான்.” என்றவரின் குரலில் உற்சாகம் குன்றியிருந்தது.

” ஓ! அப்படியா. என் பொண்ணு இந்த வருஷம்தான் இன்ஜினீயரிங்க் சேர்ந்திருக்கா.” என்றவர் சட்டென கண்ணனின் கையை இன்னொரு கையால் பற்றியபடி “நீ என்ன படிக்கப் போற?” என்றார்.

தன் கையை திடீரென ஒருவர் பற்றுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரே உதறலில் அவரது கையிலிருந்து தன் கையை உருவிக்கொண்டே “தொடக் கூடாது” என்று மறுபுறம் திரும்பி நின்று சொன்னான் கண்ணன்.

அவனது இந்த எதிர்பாரா நடவடிக்கை சந்திராவின் உற்சாகத்தை வடியச்செய்துவிட்டது. அதே நேரம் இது போன்ற அசந்தர்ப்பங்களுக்குப் பழகிப் போயிருந்த ஆனந்தி தன் கைக்குள் இருந்த சந்திராவின் கையை இன்னமும் சற்று அழுத்தியபடி சொன்னார். “தப்பா எடுத்துக்காதே சந்திரா, அவனுக்கு ஆட்டிசக் குறைபாடு இருக்கு அவனால புது மனிதர்கள் தொடுவதை, தாங்கிக்க முடியாது. சொல்லப் போனா மனுஷங்க கூட்டமா இருக்கற இடங்களுக்கு வரதே அவனுக்கு கஷ்டம்தான்.  அதை மாத்தத்தான் அப்பப்ப இப்படி ஷாப்பிங், பீச்னு பொது இடங்களுக்கு கூட்டிட்டு வந்து மெது மெதுவா அவனையும் சமூகத்தோட கலந்து பழக வச்சிட்டிருக்கோம்.”

சந்திராவுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. பேச்சை மாற்ற எண்ணி ஆனந்தியிடம் “பரவால்லடீ. சரி நீங்க வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சா?” என்றார்.

“ஆமா பையனுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது. அதான் ட்ரெஸ் வாங்கலாம்னு வந்தோம். வாங்கிட்டோம்”

” ஓ! இன்னைக்கே அவனுக்கு வாழ்த்து சொல்லிடறேன்!.. பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணா..” என்று சொன்னார். கண்ணன் பதில் பேசாமல் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான். ஆனந்தி பக்கம் திரும்பி, “எங்க உன் வீட்டுக்காரர், பின்னாடி வராறா?” என்று கேட்டார் சந்திரா.

“இல்லப்பா, அவர் வண்டிய சரிசெய்யக் கொடுத்திருந்தார். அதை வாங்க போயிருக்கார். சரின்னு நாங்க கிளம்பி வந்துட்டோம். இன்னிக்கு விட்டா அப்புறம் வார நாள்ல எங்க நேரமிருக்கும் சொல்லு?”

“ஆமா, அதும் சரிதான். நான் சும்மா சுத்திட்டுப் போகலாம்னுதான் வந்தேன், ஒன்னும் வாங்குற திட்டம்லாம் இல்ல. நீங்க டிரெஸ் வாங்கியாச்சுண்ணா… வாயேன், எங்காச்சும் போயி ஒரு காஃபி குடிக்கலாம்”

“சரிடி, நிச்சயம் போலாம். எப்படியும் கண்ணனுக்கும் எதாவது நொறுக்குத் தீனி வாங்கித் தரணும். அப்படியே நாமும் ஒரு காஃபி குடிப்போம்” என்றபடி திரும்பிய போதுதான் முதலில் நின்று கொண்டிருந்த இடத்தில் அவன் இல்லை என்பதை கவனித்தார். அதே நேரம் சந்திராவும் அதை உணர்ந்துவிட, இருவரும் பதற்றத்தோடு அவனைத் தேடத் தொடங்கினர்.

கண்ணனுக்கு அந்தப் பேரங்காடி ஓரளவு பழக்கமான இடம்தான். எப்போதும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைகளையே பின்பற்றும் வழக்கம் உள்ள அவனால் திடீரென அம்மா இன்னொருவருடன் பேசுவதற்காக ஒதுங்கி நின்றதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  அந்தப் புதியவர் தன்னையும் தொட்டுப் பேச முயற்சி செய்யவே, அவனது மனம் குழம்பிப் போனது. அதனால் அம்மா உடன் வருகிறாரா என்பதை கவனிக்காமல் அங்கிருந்து விலகி, தானியங்கி படிக்கட்டு வழியாக முதல் தளத்திற்கும், பின்னர் தரைத்தளத்திற்கும் இறங்கிச் சென்றான்.

அங்கே வரும் ஒவ்வொரு முறையும் தரைத்தளத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஆனந்தி அவனுக்கு சிற்றுண்டி வாங்கித் தருவார். எனவே நேராக அந்தக் கடைக்குச் சென்று வழக்கமாக அவர்கள் அமரும் மூலை மேசையில் அமர்ந்து கொண்டான். ஆனால் அந்தக் கடையின் வழக்கப்படி நாம்தான் சென்று உனவுப் பொருளுக்கு பணம் செலுத்தி விட்டு வர வேண்டும் என்பதோ, பிறகு நமக்கான எண்ணை அழைக்கும் போது நாம்தான் போய் உணவுப் பொருளை எடுத்து வர வேண்டும் என்பதோ அவனுக்குத் தெரியாது.  தனக்காக, அம்மா எப்போதும் வாங்கித் தரும்  எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளுக்காக அமைதியாகக் காத்திருக்கத் தொடங்கினான் கண்ணன்.

அப்போது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவொன்று உற்சாகமாக உணவகத்தின் உள்நுழைந்தது. அவர்களில் உயரமாக இருந்த ஒரு பையன் கடையின் பொறுப்பாளரிடம் சென்று அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களைச் சொல்லி, பணம் செலுத்தினான். அப்படியே அங்கே ஒலித்துக் கொண்டிருந்த மென்மையான பாடலுக்கு பதிலாக வேறொரு புதிய பாடல் ஒன்றினைக் குறிப்பிட்டு அதனை ஒலிபரப்பச் சொல்லிவிட்டு, நண்பர்களோடு சென்று சேர்ந்து கொண்டான். கடை பொறுப்பாளரும் உணவுப் பட்டியலை உள்ளே தந்துவிட்டு வந்து அவர்கள் சொன்ன பாட்டை ஒலிக்கச் செய்தார்.

வேகமான தாள நடை கொண்ட அந்தப் பாடல் கண்ணனுக்கு பதட்டத்தை அளித்தது. இந்தப் பாட்டு வேணாம் என்று அம்மாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அம்மாவை அங்கே காணவில்லை என்பது அவனது பதற்றத்தை அதிகரித்தது.

அதற்குள் அந்த இளைஞர் குழுவினர்  அவன்  அமர்ந்திருந்த மேசைக்கு அடுத்த மேசையில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு நாற்காலி தேவைப்பட்டபோது கண்ணன் அமர்ந்திருந்த மேசையிலிருந்து இரு நாற்காலிகளை இழுத்து, தங்கள் பக்கம் திருப்பிப் போட்டுக் கொண்டனர்.  தரையில் அந்த நாற்காலியின் கால்கள் இழுபட்டதில் எழுந்த ஒலி, கண்ணனின் காதில் நாராசமாக ஒலித்தது. பற்கள் கூசுமளவுக்கான அந்த ஒலி அவனை இன்னமும் அதிக அவதிக்குள்ளாக்கியது.

அந்தக் குழுவிலிருந்த கண்ணாடி அணிந்த ஒரு இளைஞன், கடை பொறுப்பாளரிடம் பாடலின் ஒலியைக் கூட்டும்படி சொன்னார். உடனே அவர் அதனை செய்தார். மீண்டும் அதே இளைஞன் இன்னொரு தரமும் ஒலியைக் கூட்டுமாறு சொல்ல, இப்போது மிகவும் உரத்த ஒலியில் அந்தப் பாடல் முழங்கியது. ஏற்கனவே அதுமிகவும் துள்ளலான தாளக்கட்டு உள்ள பாடல் என்பதால் உரத்த ஒலியமைப்பில் அங்கிருந்த வேறு சிலரையும் அது தொந்திரவுக்கு ஆளாக்கியது.

கண்ணனால் அந்த ஒலியையும், அதிர்வுகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தன் காதுகளைக் கையால் மூடிக் கொண்டு, “சத்தம் கம்மி பண்ணு” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.

முதலில் பாடலின் உரத்த சப்தத்தில் அவன் சொன்னது யார் காதிலும் விழவில்லை. மெல்ல மெல்ல அவனும் தன் குரலை உயர்த்திக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அனைவரும் அவனை கவனிக்கத் தொடங்கினர். அதற்குள் அவன் உணர்ச்சி வசப்பட்டு அழவும் ஆரம்பித்திருந்தான். ஒரு பதின் பருவத்து இளைஞன் பொது இடத்தில் அழுவதும், வினோதமாக நடந்து கொள்வதும் அனைவரின் கவனத்தையும் இழுக்கத் தொடங்கியது.

அந்த இளைஞர் குழுவுக்கோ இது மிகவும் வேடிக்கையாகத் தெரிந்தது. அதில் ஒருவன் தன் கைபேசியை வெளியில் எடுத்து, அதில் கண்ணனின் நடவடிக்கையை ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினான். மற்ற நால்வரும் அவனைப் பார்த்து சிரிப்பதும், தங்களுக்குள் அவனைப் பற்றி கேலியாகப் பேசிக் கொள்வதுமாக இருந்தனர்.

அதே உணவகத்தின் இன்னொரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் இந்த கலாட்டாவினால் எரிச்சல் அடைந்தனர். அப்பா ராஜேஷும் அம்மா பிரியாவும் மென்பொருள் துறை ஊழியர்கள். ஒரே மகன் பிரத்யுனுக்கு மிகவும் பிடித்த கடை என்பதால் அங்கு வந்திருந்தனர்.

“என்னங்க இந்தக் கடைல இன்னைக்கு ஒரே இரைச்சலா இருக்கு? பேசாம ஆர்டர் பண்ணினதை பார்சலா வாங்குங்க, வெளில போய் உக்காந்து நிம்மதியா சாப்பிடலாம்.”

“இரு, அவசரப் படாதே. இருக்கற எல்லாரையும் தொல்லை பண்ணுற அளவுக்கும், அந்தப் பசங்களுக்கு ஏத்தா மாதிரியும் சூழலை மாத்தறது தப்புல்ல? கடைக்கார தம்பிகிட்ட நான் பேசிப்பாக்கறேன்”

அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருக்க, பிரத்யுன் முதலில் வாங்கியிருந்த பழச்சாற்றை பருகுவதில் மும்முரமாய் இருந்தான். திடீரென கண்ணனின் அழுகுரல் கேட்கவே, சுவற்றினைப் பார்த்த இருக்கையில் அமர்ந்திருந்த அவன் திரும்பிப் பார்த்தான். சூழலை ஒரு நொடியில் புரிந்து கொண்டவன் சட்டென தனது இருக்கையிலிருந்து எழுந்து அந்த கும்பலை நோக்கிச் சென்றான்.

”டேய், நீ எதுக்குடா அங்க போற, நமக்கு எதுக்கு வம்பு? என்னங்க அவனை நிறுத்துங்க” என்று பிரியா பதட்டமானார்.

ராஜேஷ் அவரைத் தோளில் தட்டி அமைதிப்படுத்திவிட்டு, அவரும் மகனுக்கு ஆதரவாக பின்னால் சென்று நின்று கொண்டார். அப்போதுதான் அங்கே பாதிக்கப்பட்டிருக்கும் நபர் தன் மகனின் வகுப்புத் தோழன் கண்ணன் என்பதை உணர்ந்தார்.

“எக்ஸ்கியூஸ் மீ, எதுக்காக இப்படி அநாகரீகமா நடந்துக்கறீங்க? மொதல்ல வீடியோ எடுக்கறத நிறுத்துங்க அவன வீடியோ எடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” பிரத்யுன் நிதானமான, அதே நேரம் உறுதியான குரலில் கேள்வியை எழுப்பினான்.

“பொது இடத்துல இப்படி காமெடியாவும், மோசமாவும் நடந்துகிட்டா நாங்க அதை வீடியோ எடுக்குறதுல என்ன தப்பு? எதுக்கு நீ இப்படி கிடந்து குதிக்கற?”  என்று வீடியோ எடுத்த இளைஞன் எகிற, அவன் நண்பர்கள் அவனுக்கு துணைக்கு வந்தனர்.

“நீ யாருடா பெரிசா பஞ்சாயத்துக்கு வந்துட்ட? எங்களுக்கு எப்படி நடக்கணும்னு சொல்லித்தர நீ யாரு?”
“இதென்ன உன் கடையா? இல்ல இந்த மாலே உங்க அப்பா தாத்தா சொத்தா?”

ராஜேஷ் தான் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டதென பேச ஆரம்பித்தார்.

“தம்பிங்களா, அதே மாதிரி இந்தக் கடையோ, மாலோ உங்களுக்கும் சொந்தம் இல்லதானே? மொதல்ல நீங்க பாட்டுச் சத்தத்த இவ்வளவு ஏத்த சொன்னதே தப்பு. பத்தாததுக்கு அந்த சத்தத்தால் இப்படி கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கற பையன வீடியோ எடுக்கறீங்க; கேலி பண்றீங்க… இதெல்லாம்தான் உண்மைல ரொம்ப அநாகரீகமான நடத்தை”

வீடியோ எடுக்காதே என்ற பிரத்யுனுக்கு ஆதரவாக அவன் அப்பா வந்ததும் அரைமனதாகவேனும் வீடியோ எடுப்பதை அந்த இளைஞன் நிறுத்தினான்.

இதற்குள்ளாக பிரத்யுன் கண்ணனின் அருகில் சென்றான். அவன் முதுகில் மாட்டியிருக்கும் பையில் ஒலியைக் குறைக்கும் காது மாட்டி ஒன்று எப்போதும் இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். கண்ணனின் தோளோடு அணைத்துக் கொண்டு “ஒன்னுமில்ல கண்ணன். ஒன்னுமில்ல. ரிலாக்ஸ்” என்று பேசியவாறே அவனது முதுகுப் பையை பிரித்து, அந்த காது மாட்டியை எடுத்து அவனுக்கு அணிவித்தான். பிரத்யுனை அந்த இடத்தில் பார்த்த கண்ணனின் கண்களில் ஒரு சின்ன வெளிச்சம் பரவியது. கைகளைக் காதிலிருந்து எடுத்துவிட்டாலும் குறுகி அமர்ந்தவன் நிமிரவே இல்லை.

மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஈரம் ஒற்றும் தாள்களை எடுத்து கண்ணனின் கண்களையும், மூக்கையும் துடைத்து விட்டான் பிரத்யுன். இன்னமும் “சத்தம் கம்மி பண்ணூ” என்று விசும்பியபடியே சொல்லிக் கொண்டிருந்தான் கண்ணன்.

அதற்குள் ராஜேஷ் கடை பொறுப்பாளரை நோக்கித் திரும்பி பேச ஆரம்பித்தார்.

“ஏன்பா, ஒரு  வாடிக்கையாளர சந்தோஷப்படுத்தறதுக்காக இவ்வளவு உரத்த சத்தத்துல பாட்டு போடலாமா? நிர்வாகத்துகிட்ட இது பத்தி புகார் பண்ணவா?”

”சாரி சார்” என்றபடியே பாட்டை நிறுத்தினார் பொறுப்பாளர்.

இப்போது கண்ணனின் அழுகை அடங்கியிருந்தது. பிரியாவும் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து, கண்ணனின் அருகில் சென்று நின்றுகொண்டு, அவனை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார். பிரத்யுன், பிரியாவின் இருவரின் அருகமைவும் கண்ணனைக் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படுத்தியது.

பிரத்யுன், அந்த இளைஞர்களைப் பார்த்து, “இவன் பேர் கண்ணன். இவன் என்கூடத்தான் படிக்கறான். இவனுக்கு ஆட்டிசம்னு சொல்லப்படற குறைபாடு இருக்கு. இவங்களுக்கு கண்ணு, காது, மூக்கு, தோல்னு புலனுறுப்புகள் எல்லாம் நம்மைவிடவும் ரொம்ப நுட்பமா வேலை செய்யும். இவனுக்கு அதிக சத்தம் ஆகாது.

வேறு சிலருக்கு தொட்டால் பிடிக்காது. இன்னும் சிலருக்கு அதிகப்படியான வெளிச்சம் ஆகாது. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிக்கல் இருக்கும். ஆனா இவங்களும் நம்மள மாதிரியான மனுஷங்கதான். வேறுபட்ட நடத்தை இருந்தாலும் எந்த வகையிலும் அவங்கள மட்டமா நடத்தவோ கிண்டல் செய்யவோ கூடாதுன்னு சட்டமே சொல்லுது. நாம பாக்குற அதே உலகத்தை அவங்க கொஞ்சம் வேற விதமா பாக்குறாங்க, அவ்வளவுதானே தவிர அவங்க நமக்கான வேடிக்கை பொருள் இல்ல.” என்று சொன்னான்.

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, சட்டென நினைவு வந்தவராக பிரியா தனது செல்பேசியை எடுத்து அதில் கண்ணனின் அம்மா எண்ணைத் தேடி எடுத்து அழைத்து தாங்கள் இருக்குமிடத்தைச் சொன்னார்.

வீடியோ எடுக்க முயற்சித்த இளைஞனின் தலை தாழ்ந்தது. மிக மெதுவாக “சாரி” என்று முணுமுணுத்தான். மற்ற இளைஞர்களின் முகத்தில் இருந்த கிண்டலான பார்வையும் இப்போது மாறியிருந்தது. அனைவரும் சங்கடமான மௌனத்தில் இருந்தனர்.

“கண்ணன் ரொம்ப அருமையா பாடுவான். நீங்க அவன வீடியோ எடுக்கணும்னு விரும்பினால், அவன் முழுசா சமாதானம் ஆனபிறகு அவனை நான் பாட சொல்லி கேக்கறேன். அவன் பாடினா, அதை வேணும்னா வீடியோ எடுங்க. ஒருத்தரோட திறமைய பரப்பறதுக்குத்தான் நமக்கு உரிமை இருக்கே தவிர, யாரையும் அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்ல” என்றார் ராஜேஷ்.

அப்போதுதான் கடையருகே வந்த ஆனந்தி, கண்ணனின் இருபுறமும் நின்றிருந்த பிரியாவையும் பிரத்யுன்னையும் பார்த்து கையை அசைத்துக் கொண்டே நெருங்கி வந்தார். அவருடன் வந்த சந்திராவும் கண்ணனைக் கண்டதும் நிம்மதியானார்.

அம்மாவைப் பார்த்தும் வேகமாய்ச் சென்று அவரைக் கட்டிக்கொண்டு, ”அம்மா, சத்தம் கம்மி பண்ணு” என்றான் கண்ணன்.

“உனக்குப் பிடிக்காத பாட்டைத்தான் நிறுத்தியாச்சே, தம்பி. இனி உனக்கு பிடிச்ச பாட்டா நீ பாடு. நாங்க எல்லாரும் ரசிக்கத் தயாரா இருக்கோம்” இது வீடியோ எடுக்க முயற்சித்த அதே இளைஞனின் குரல்தான் என்பதை வியப்புடன் பார்த்தான் பிரத்யுன்.

இப்போது அந்த பேரங்காடியின் ஒலியும், ஒளியும் கண்ணனுக்கு ஏற்றபடி மென்மையானதாக, அரவணைப்பதாக மாறியிருந்தது.

+++
20.11.2025 – ஆனந்த விகடனில் வெளிவந்த கதை

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

மாற்றுத் திறன் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் சுமையா?

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒவ்வொரு சமூகமும் மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகே சிலபல சட்ட உரிமைகளை பெறுகிறார்கள். ஆனால் அதைத் தட்டிப்பறிக்க ’வாடியிருக்கும் கொக்கு’களுக்கு நம் சமூகத்தில் பஞ்சமே இருப்பதில்லை. எத்தனையோ அடுப்புகள் வெடித்து, நூறு நூறு சீதைகள் தீக்குளித்த பின்னரே வரதட்சணை தடை சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் எங்கேனும் ஒரு வரதட்சிணை புகார் போலியானது, அந்த ஆணின் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால், உடனே ஆஹாவென எழும் ஒரு கூட்டம் – “இந்த 498 தூக்கணும் சார், இத வச்சுகிட்டு ஒரே பொய்ப் புகாரா கொடுத்து, அப்பாவி ஆண்களை பழிவாங்கறாளுக” என்று புலம்புவார்கள்.

இப்படியான பல்வேறு சட்ட உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறன. இதெல்லாம் ஏதோ அறியாமை கொண்டோரின் குரல் என்று ஒதுக்கிவிட முடியாது. கல்வித் துறையில் பணிபுரியும் கற்றறிந்த ஆசிரியப் பெருமக்களில் சிலரும் கூட இப்படியான சமயம் பார்த்து கல்லெறியும் வேலையைக் கையில் எடுத்திருப்பது ஒரு துன்பியல் நிகழ்வே.

புதிய கல்வியாண்டு தொடங்கியதுமே சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரின் பதற்றங்களும் தொடங்கிவிட்டன. ஏற்கெனவே இருக்கும் பள்ளியிலேயே அடுத்த வகுப்பு செல்வதாக இருந்தால் கூட, இந்த ஒரு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பிள்ளைகளை பள்ளிக்குச் செல்லும் மனநிலைக்குத் தயார் செய்தாக வேண்டும். புதுப் பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்தால் கேட்கவே தேவையில்லை – அனுமதி கிடைக்குமா, என்னென்ன எதிர்ப்புகள் எல்லாம் வரும், எப்படி அவற்றையெல்லாம் சமாளிப்பது என சங்கிலித் தொடராய் நீளும் சிந்தனைகள் காத்திருக்கும்.

பொதுவாக சற்று வசதியானவர்கள் தொடக்கத்தில் ‘இன்குளூசிவ்’ என்று சொல்லிக் கொள்ளும் தனியார் பள்ளிகளின் கதவுகளைத் தட்டுவார்கள். சில நாட்கள் அல்லது மாதங்களுக்குப் பின், நிறைய பண இழப்பிற்கும் அலைக்கழிப்பிற்கும் பின்னர் வெளியேற்றப்படுவார்கள். பிறகு ஏதேனும் சிறப்புப் பள்ளிகளைக் கண்டடைந்து அங்கே பிள்ளைகளைச் சேர்த்துவிடுவார்கள். நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு தனியார் பள்ளிகளின் கதவைத் தட்டுவது எட்டாக் கனி – எனவே அவர்களின் ஒரே புகலிடம் அரசுப் பள்ளிகள்தான்.

அதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழேயோ அல்லது சில அங்குலங்கள் மேலாகவோ இருக்கும் குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது தவிர்க்க முடியாத தேவை. எனவே சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளை பாதுகாப்பான அதே நேரம் கற்றலுக்கான சூழல் உள்ள ஓர் இடத்தில் ஒப்படைக்கத் துடிக்கிறார்கள். அதன்பொருட்டே அரசுப் பள்ளிகளை நாடி வருகிறார்கள்.

ஆனால் கல்வியாண்டு தொடங்கும்போதே ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான தள்ளுமுள்ளுப் போராட்டமும் தொடங்கிவிடுகிறது.

சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்கவே மாட்டோம், சேர்த்தாலும் வீட்டிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்பது பெரும்பான்மை ஆசிரியர்களின் தரப்பு வாதமாக இருக்கிறது. இக்குழந்தைகளின் நடத்தைச் சிக்கலை சமாளிக்க முடிவதில்லை என்பது தொடங்கி தேர்ச்சி விகிதத்தை கீழே இழுக்கிறார்கள் என்பது வரை பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்பட்டு வருகின்றன.

அதே நேரம் பெற்றவர்களின் தரப்பு வாதத்தில் இருப்பது ஒரே ஒரு காரணம் மட்டும்தான் – குழந்தைப் பருவம் என்பது 0 முதல்18 வயது வரை என்று கொண்டால், அவ்வயதை எட்டும் வரை எங்கள் குழந்தைகளும் கற்க வேண்டும்தானே என்கிற ஏக்கம்தான் அக்காரணம்.

கற்றல் குறித்த எதிர்பார்ப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. என் தோழி ஒருத்தி, மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தாலும் மீதியிருந்த இரண்டு பாடங்களில் குறைந்துவிட்ட ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களுக்காக அசோகவனத்து சீதை போல துக்கம் காப்பாள். இன்னொரு நண்பனோ மூன்று பாடங்களில் முப்பத்தி ஐந்து மதிப்பெண் பெற்றுவிட்டதற்கே நண்பர்களுக்கு இனிப்பு வாங்கித் தந்து கொண்டாடுவான் – மீதமுள்ள இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை மதிக்கவே மாட்டான்.

அது போலவே மாற்றுத் திறன் மாணவர்களுக்கான கல்வி என்பது அந்தந்த வகுப்புக்கு உரிய பாடங்களைப் படித்து, தேர்வில் எழுதி, மதிப்பெண் பெறுவதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறப்புக் குழந்தைகளைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக அறிவு சார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு  நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அளவு எண்ணறிவும், எழுத்தறிவும் பெறுவது, சமூகத் திறன்களை மேம்படுத்திக் கொள்வது இரண்டும்தான் தலையாய தேவை.

இங்கே முதல் தேவையான நடைமுறைக் கல்வியை சிறப்புப் பள்ளிகளிலேயே பெற முடியும் என்றாலும் இரண்டாவது தேவையான சமூகப்புரிதலைப் பெற தன் வயதொத்த, சராசரிக் குழந்தைகளுடன் பழகுவது ஒன்றே தீர்வாக இருக்க முடியும். அதற்காகத்தான் பொதுப் பள்ளியில் சிறப்புக் குழந்தைகளும் இடம் பெற வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புத்துகின்றனர்.

எங்கே சிக்கல் வருகிறதென்றால், எல்லா சிறப்புக் குழந்தைகளாலும் பொதுப் பள்ளியில், பிறர் உதவியின்றி இயங்க முடியாது என்ற நிதர்சனத்தை உள்வாங்காத பெற்றோர்களுக்கும், மிகச் சிறிய அளவு மாறுபட்ட நடத்தை இருந்தாலே அக்குழந்தையை பள்ளிக்கு வராதே என்று தடை போடத் துடிக்கும் பெரும்பான்மை ஆசிரியர்களுக்கும் நடுவே நின்று தேவையான தெளிவை வழங்கக் கூடியவர்கள் இங்கில்லை என்பதில்தான்.

அரசு சமகிர சிக்ஷா(Samagra Shiksha) என்றொரு திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது ஐ.நா ஒப்புக் கொண்டுள்ள வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்களில் ஒன்றான அனைவருக்கும் கல்வி(Sustainable Development Goal for Education SDG-4) என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக உருவான திட்டம். அதிலும் குறிப்பாக அக்குறிக்கோளின் உட்பிரிவான 4.5 மிகத் தெளிவாக 2030ஆம் ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதில் பாலின பாகுபாடோ, மாற்றுத் திறன் உட்பட எவ்வித சமூகப் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையிலான பாகுபாடோ இருக்கக் கூடாது என்று வரையரை செய்கிறது. அக்குறிக்கோளை நடைமுறைப்படுத்தவே இந்த சமக்கிர சிக்ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக சிறப்புக் குழந்தைகளை அவர்களது பாதிப்பின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது வழக்கம்.

  • பரமாரிக்கப்பட வேண்டிய குழந்தைகள்(Custodial)
  • பயிற்சி பெறத்தக்க குழந்தைகள்(Trainable)
  • கற்கக் கூடிய குழந்தைகள்(Educatable)

இதில் பராமரிக்கப்பட வேண்டிய குழந்தைகளின் பராமரிப்பாளருக்கு(Care Taker) தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.

பயிற்சி பெறத்தக்க குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிச் சூழலில், தனி நபருக்கான பாடத்திட்டத்தை(Individualized Education Plan – IEP) உருவாக்கி, அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை அளிக்க வேண்டும்.

கற்றுக் கொள்ளக் கூடிய குழந்தைகளுக்கு, அவர்களது குறைபாட்டின் தீவிரத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு நடத்தைச் சிக்கல்களும் குறைவாகத்தான் இருக்கும். அவர்களை பொதுப் பள்ளியிலேயே கற்பித்தல்தான் சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் தங்கள் வயதொத்த சக மாணவர்களோடு பழகுவதன் மூலம் மேம்பட்ட சமூகப் புரிதலை அடைய முடியும். மற்ற மாணவர்களுக்கும் ஒரு சிறப்புத் தேவையுடைய நபரை எப்படி கனிவோடு நடத்த வேண்டும் என்று கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். எனவே அனைவருக்கும் நலம் பயக்கும் அமைப்பாக, பள்ளிச் சூழல் அமையும். ஆனால் இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், புரிந்துணர்வும் மிக மிக அவசியம். ஏனெனில் மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பது போல ஒரு வகுப்பில் ஆசிரியரே ஒரு மாணவரை உதாசீனமாக நடத்தினால் மாணவர்களும் அதையே பின்பற்றுவர். எனவே அந்தச் சூழலே அக்குழந்தைக்கான தண்டனையாக மாறிவிடும். இதுதான் பெரும்பான்மையான இடங்களில் நடக்கிறது.

சிறப்புக் கல்வியாளரின் பங்கு:

பள்ளியில் சிறப்புக் குழந்தைகளைச் சேர்க்க வரும் எல்லாப் பெற்றோருக்கும் ஆசிரியர்கள் முதல் வழிமுறையையே, அதாவது பெயரளவுக்கு பதிவு செய்துவிட்டு, வீட்டிலேயே குழந்தையை வைத்துக்கொள்வதையே பரிந்துரைக்கின்றனர். ஆனால் பெற்றோரோ தன் குழந்தையின் நிலையைப் பற்றிய புரிதல் இல்லாது மூன்றாவது முறையான பொதுப்பள்ளியில் அவர்களை சேர்ந்துக் கொள்ளுங்கள் என்றே கோருகின்றனர். இந்த இரு சாராருக்கும் நடுவில்  துல்லியமாக அளவீடு செய்து, குழந்தைக்கு பொருத்தமான கற்றல் சூழல் எதுவென தீர்மானிக்க வேண்டியவர்கள் சிறப்புக் கல்வியாளர்களே.

சிறப்புக் குழந்தைகள் பள்ளிச் சேர்க்கைக்காக வரும்பொழுது, அவர்களை வட்டார வள மையத்திற்கு நெறிப்படுத்த வேண்டும். அங்கு சிறப்பாசிரியர் குழு ஒன்று குழந்தையின் நுண்ணறிவுத் திறனையும், பாதிப்பின் தீவிரத்தன்மையையும் அளவிட்டு, அக்குழந்தையின் பெற்றோருக்கு சரியான வழிமுறையை பரிந்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் அக்குழந்தை பொதுப்பள்ளிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அக்குழந்தையின் வீட்டருகில் இருக்கும் எந்த பள்ளியும் அக்குழந்தையை மறுதலிக்காமல் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

பொதுப்பள்ளியில் பயின்றாலும் அக்குழந்தைக்கு சிறப்புக் கல்வி ஆசிரியரின் கவனிப்பும், வழிகாட்டலும் தேவை. அக்குழந்தைக்கு மட்டுமல்லாது, கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பாசிரியர்கள் உதவ வேண்டும். ஆனால் இப்போது உள்ள சூழலில் சிறப்பாசிரியர்கள் பள்ளிக்கு வந்து, பயிலும் சிறப்புக் குழந்தைகளை கணக்கெடுப்பதோடு அவர்களின் பணி முடிந்துவிடுகிறது.

அதிகபட்சமாக உதவித்தொகை, அடையாள அட்டை, பயணச் சீட்டு சலுகை போன்றவற்றைப் பற்றி பெற்றோருக்கு சொல்கிறார்களே தவிர குழந்தையின் கற்றலைப் பற்றி பலரும் ஒரு நொடி கூட கவனிப்பது கிடையாது. அதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஏனெனில் தேவையான எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான சிறப்புக் கல்வியாளர்களே நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கும் பணி நிரந்தரமாக்கப்படுவதில்லை என்பது போன்ற காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால் கடைசியில் பலியாவது என்னவோ சிறப்புக் குழந்தைகளின் கல்விதான்.

மேலும் கொரோனா தொற்றுக்குப் பின்னான சூழலில் சாதாரணமான நுண்ணறிவுத் திறன் கொண்ட மாணவர்களுக்குமே கூட கற்றலில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. கற்றல் குறைபாடு(Specific Learning Disability) கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. அத்தகைய மாணவர்களுக்கு வழக்கமான வகுப்பறைச் சூழலில் அளிக்கப்படும் கற்பித்தல் முறைகள் போதுமானவை அல்ல. அவர்களுக்கும் சிறப்புக் கல்வியாசிரியர்களின் உதவி தேவை.

வட்டார வள மையங்கள் தேவையான சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், மற்ற பயிற்சியாளர்கள், பயிற்சிக்கு தேவையான உபகரணங்களுடன் தரமான சிறப்புப் பள்ளியாக செயல்பட வேண்டும். பள்ளிகளுக்கு சுற்று முறையில் சென்று, அங்கு பயிலும் சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களுக்கு உதவவும் கூடுதல் சிறப்புக் கல்வியாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக ஆசிரியர்கள் சிறப்புக் குழந்தைகளை சுமையாக எண்ணாமல், அவர்களையும் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இனைப்பது தங்கள் பொறுப்பு என்று எண்ணி, விரிந்த மனதோடு செயல்பட வேண்டும். 

புதிய கல்வியாண்டின் துவக்கத்தில் மாணவர் சேர்க்கையின் போதே சிறப்புக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கத் தயங்குவதும், சேர்த்தாலும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தும் போக்கும் அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணமாக பொதுத்தேர்வின் போது சொல்வதை கேட்டு எழுதும்(scribe) ஆசிரியர்கள் கற்கும் திறனில்லாத மாணவர்களும் தேர்ச்சி அடையும் வண்ணம் எழுதி விட்டதாகவும், அதனால் இப்போது தகுதியில்லாத மாணவர்கள் அடுத்த கட்ட கல்விக்காக வந்து விண்ணப்பிப்பதாகவும், இது அடுத்தடுத்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இவை எல்லாமே உண்மையாகவே இருந்தாலும் கூட, அதனை சரி செய்ய சிறப்புக் குழந்தைகளின் கல்வியை மறுப்பது சரியான தீர்வாக முடியாது. அவர்களுக்கு உரிய கல்வியை, சரியான வழிமுறையில் திட்டமிட்டு வழங்க வேண்டியது இச்சமூகத்தின் கடன். இந்திய அரசு ஒப்புக் கொண்டபடி ஐ.நாவின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைவதற்கும் இது ஒன்றே தீர்வு.

நன்றி – இந்து தமிழ் திசை – 12/06/2025

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

நீளும் பிரார்த்தனைகள்

நூல்: இதோ நம் தாய்

ஆசிரியர்: வயலட்

பதிப்பகம்: சால்ட்

விலை:125/-

**********************

புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றை துக்கத்தின் காரணிகளாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபடுதலையே வீடு பேறென வகுத்த புத்தரின் உடற் பிணி குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒருவராக அவர் அறிமுகம் ஆகிறார். நிகரற்ற நினைவாற்றல், அர்ப்பணிப்புணர்வு, கருணை என நற்குணங்களால் நிரம்பியிருந்தும் பரிநிர்வாண நிலையை அடைய முடியாது தவித்த ஆனந்தரின் தவிப்பு அன்பினால் விளைந்தது. அதே அன்புதான் ஆனந்தியையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.

ஆனந்தி, யசோதா, கௌதமி என சித்தார்த்தரின் வாழ்வில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் கதையிலும் புழங்குகின்றன. மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.

சித்தார்த்தரின் வாழ்வில் முக்கியப் பாத்திரம் வகித்த அவரது சிற்றன்னை கௌதமியின் பெயரைக் கொண்டவர்தான் ஆனந்தியின் தாய். இளம்பருவத்தில் கல்வியும், தோழமையும் மறுக்கப்பட்டதால் காயப்பட்ட கௌதமி, தனக்குப் பெண் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கிறார். அவர் விருப்பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்னால் தன்னை ஒரு பெண்ணாக முன்வைக்கும்போது, அவ்வுறவு விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாகிறது. பொதுவாகவே அம்மா மகன் உறவைப் போன்றதல்ல அம்மா மகள் உறவு. அது பெரும்பாலும் சேர்ந்திருக்கையில் வெறுப்பும், இழந்தபின் அன்புமாக விரிவடையும் வினோதமான ரசாயனம். அதிலும் மாற்றுப் பாலின அடையாளத்தை முன் வைக்கும் மகளோடு கௌதமி கொண்டிருக்கக்கூடிய உறவு மிகவும் நுட்பமான சிடுக்குகள் நிறைந்தது.

தாயுடன் மட்டுமல்லாது, துணையாக வரும் யசோதா, தோழர்களான யாஸ்மின், கவின்,சிவா என அனைவருடனுமே ஆனந்தி கொள்ளும் உறவின் சிடுக்குகளே கதையின் பேசுபொருள் எனலாம். எல்லா சிடுக்குகளும் சேர்ந்து ஆனந்தியின் மீது சுமத்தும் தனிமை மனச்சோர்வாக மாறுகிறது. மனச்சோர்வென்பது உற்சாகக் குறைவு, எதிலும் நாட்டமின்மை, குற்றவுணர்வைத் தூண்டுதல் என பல்முனைத் தாக்குதலை நம் மீது நடத்தக் கூடியது. அதே கோணங்களிலேயே கதை விரிகிறது.

நாவலில் எல்லா சம்பவங்களும் விரிவாக உரையாடலுடன் முன் வைக்கப்படுவதற்கு மாறாக, தீற்றல்களாக அங்கங்கு சிந்திச் செல்லும் முறை மிக லாகவமாகக் கைவந்திருக்கிறது வயலட்டிற்கு. கதையல்லாத கதை சொல்லல், நிகழ்காலத்திற்கு பின்னணியாக வரும் கடந்த கால விவரணைகள் என கரடுமுரடான பாதையில் மிக அனாயசமாக காற்றில் மிதப்பது போலச் செல்கிறது மொழிநடை.  வயலட் நேரடிப் புனைவுகளையும் தொடர்ந்து எழுத வேண்டும்.

வில்லியம் ரைஸ் டேவிஸ், ஹெர்மன் ஓல்டன்பெர்க் , எரியும் நூலகத்தைக் கனவில் கண்டலறும் புத்த பிக்கு,  கே.எஸ் என தொடரும் வரிசையில் ஆனந்தியும் தம்மபதத்தின் பிரதிக்குள் தொலைந்து போகிறாள். தம்மபதத்தின் தத்துவச் சுழல்களுக்குள் அமிழும் ஆனந்தியின் முன் கலங்கரை விளக்காகச் சுடர்வது சிறிய குருசடியில் கடல் பச்சை நிறச் சேலையில் ஒளிரும் மேரியின் முகம்தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு உதவுகிறது.

மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய முயற்சிக்கும் ஆனந்தியிடம் அவள் மனம் உன்னால் அது முடியாது என்று கெக்கலி கொட்டுவதை என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. என் தோழியர் சிலருக்கும் தெய்வ நம்பிக்கையென்பது மிக பலவீனமானதொரு சரடாகத் தொடர்வதால் பல சமயங்களில் கோவிலில் சுற்றியுள்ளோரின் பக்தி பாவத்தைக் கண்டு வியந்து, நாணியதை அவர்கள் விவரித்தது படிக்கையில் நினைவில் எழுந்தது.

வழக்கமான கதை, அதற்கொரு முடிவு என்றில்லாது ஆனந்தியின் நாட்குறிப்பை எட்டிப் பார்ப்பது போன்ற வாசிப்பனுபவத்தை தந்த நாவல் இது.

மனச் சோர்விலிருந்து மீண்டெழ உளவியலில் முன்வைக்கப்படும் வழிமுறைகள் செயல்படுவது என்பதுதான். சின்னச் சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது, முன்பு மனதிற்கு இன்பமளித்துக் கொண்டிருந்தவற்றை மீண்டும் கையிலெடுப்பது ஆகியவையே சிறிய அளவிலான மனச்சோர்விலிருந்து மீளும் வழிமுறைகள். எனவே ஆனந்தி யசோதாவிற்காக முன்வைத்த வேண்டுதலையே நானும் அவளுக்காக முன்வைக்கிறேன்.

அவள் மனதில் சொற்கள் தோன்றட்டும்.அவள் பாதை வெளிச்சம் அடையட்டும்.

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

எஞ்சுவதே கலை – டி. எம். கிருஷ்ணா

புழல் சிறைவாசிகளுக்கு கலை வடிவங்களைக் கொண்டு செல்லும் திட்டம் ஒன்றினை, பாடகர் டி.எம். கிருஷ்ணாவும், சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து கடந்த ஆண்டில் நடத்தியுள்ளனர். எட்டு மாத காலம் நடந்த இவர்களின் ’சிறைகளில் கலை’ எனும் திட்டத்தின் விளைவாக அங்கு சிலபல கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த முயற்சிகளைப் பற்றிய பகிர்வுகள் இம்மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிக் கல்வி இயக்குனரக வளாகத்தில் உள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி அரங்கில் நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறையினுள் நடைபெற்ற பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சியோடு இத்திட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய பாடகர் டி.எம்.கிருஷ்ணாவும், பிராஜக்ட் 39 ஏ அமைப்பைச் சேர்ந்த மைத்ரேயி மிஸ்ராவும் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினர். அதன் இறுதியில் கேள்விபதில் பகுதியும் இருந்தது.

சிறைவாசிகளை குணப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே கிருஷ்ணா தெளிவுபடுத்திவிட்டார். சிறைவாசிகள் என்றோ குற்றவாளிகள் என்றோ அங்கிருப்பவர்களை வரையறுப்பது தவறு என்ற கிருஷ்ணா, இல்லத்துவாசிகள் என்றே அவர்கள் தங்களவரைக் குறிப்பிடுவதாகவும், அதையொட்டி தாங்களும் இன்மேட்ஸ்(In mate) எனும் வார்த்தையையே அவர்களோடு தொடர்புபடுத்துவதாகவும் தெரிவித்தார். வாழ்வின் ஒரு கட்டத்தில், அவர்களின் செயல்கள் சட்டத்திற்கு புறம்பானவையாக அமைந்திருக்கலாம். அதற்காக அவர்கள் சட்டபூர்வமாக தண்டிக்கப்படுவதும் இயல்பே. அதைத்தாண்டி அவர்கள் மனிதர்களே அல்ல என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. அவர்களும் மனிதர்களே என்று உணர்ந்தால், கலையை அணுக அவர்களுக்கும் உரிமை உண்டுதானே என்ற எண்ணத்தில் எழுந்தது இத்திட்டம் என்று குறிப்பிட்டனர். நாகஸ்வரம், தவில், பறையாட்டம், கீபோர்ட், வாய்ப்பாட்டு, நாடகம், ஓவியம், சுடுமண் உருவங்கள் வனைதல் என பலவகைக் கலைகளையும் கற்பித்த ஆசிரியர்களில் சிலரும் அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கற்பித்த ஆசிரியர்களில் பெண்களும் உண்டு என்பதும், ஆரம்பத்தில் ஆண்களின் சிறைப்பகுதிக்குள் செல்ல இருந்த சிறு மனத்தடைகள் நாளடைவில் எப்படி கரைந்தன என்பதை அவர்களே சொன்னதும் நெகிழ்வாக இருந்தது. நாகஸ்வரம் பயிற்றுவித்தவரோ தனது அனுபவத்தில் இத்தனை விரைவாகக் கற்றுக் கொண்டவர்களை பார்த்ததில்லை என்றார். பெரும்பாலானவர்களுக்கு அக்கருவியில் ஒலியை எழுப்பவே சில மாதங்கள் எடுக்கும் நிலையில் இவர்கள் ஆறு மாத கால பயிற்சியில் ஓரளவு பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றிருப்பது குறித்த தனது வியப்பையும், மகிழ்வையும் பகிர்ந்து கொண்டார்.

பிறகு கிருஷ்ணா பக்க வாத்தியங்களின் குறுக்கீடுகளற்ற ஒரு இசை விருந்தினைப் படைத்தார். நாம் அவன் இவன் உவன் எனத்தொடங்கும் நம்மாழ்வார் பாசுரம், பெருமாள் முருகன் எழுதிய அன்பு பற்றிய குறுங்கவிதை ஒன்று, இறுதியில் அசோகரின் தம்மம் பற்றிய கூற்றுகள் சில என மூன்று பாடல்களை எடுத்துக் கொண்ட கிருஷ்ணா, அவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிவிட்டு, மரபிசைக்கே உரிய மிக விரிவான வடிவில் பாடினார். ஒவ்வொரு பாடலுக்குப் பிறகும் அங்கிருந்த அனைவரையும் அது குறித்து உரையாடவும் அழைத்தார். மிகுந்த நட்பார்ந்த தொனியில், மற்றவர்களின் கருத்துக்களை ஒட்டி தனது பார்வையையும் விவரித்தபடியே அவர் பாடியது மிக மிகப் புதுமையான ஒரு வடிவமாக இருந்தது. இப்படியானதொரு இசை நிகழ்விற்கு முன்மாதிரிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெருந்தொற்றுக்கால தனிமைச் சூழலில் இவ்வகை வடிவத்தை தான் கண்டடைந்ததாகச் சொன்னார் கிருஷ்ணா.
நிகழ்வு முடிந்ததும் அவரிடம் எழுதாப் பயணம் நூலை அளித்தேன். நிகழ்வு தொடங்கும் முன்னரே கனியை அவருக்கு அறிமுகம் செய்வித்திருந்தேன். கிளம்பும் முன் அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறைவாசிகளுக்கு நூல்கள் சேகரித்துத் தருவதையும் இக்குழுவினர் செய்கிறார்கள். எனவே விரும்புவோர் மீதமுள்ள 3 சனிக்கிழமைகளில் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டிக்கு சென்று புத்தகங்களை கொடுக்கலாம்.

பேச்சின் நடுவில் கலை என்பது என்ன என்று விவரிக்க முற்பட்ட கிருஷ்ணா “மனிதர்கள் தான் உணரும் ஒன்றை பிரதி செய்ய முயல்கின்றனர். ஆனால் ஒருபோதும் அசலை முழுமையாக பிரதி செய்ய முடியாது என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாம் உணர்ந்த ஒன்றின் சாரத்தை நாம் புரிந்து கொண்ட வகையில் வெளிப்படுத்துவதே கலை” என்றார். அந்த வரையரையின் ஆழத்தை வியந்தபடியே வெளியே வந்தோம்.

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

புத்தகக் கண்காட்சியில் இன்று 06/01/25

இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல்வனம் அரங்கில் வானம் பதிப்பக உரிமையாளர் மணிகண்டனோடு அளவளாவினொம். அவருடன் நடந்து செல்கையில் திருக்கார்த்தியல் ராம் தங்கம் தம்பியைச் சந்தித்தோம். ராமும் மணியை கலாய்ப்பதில் எங்களோடு சேர்ந்து கொள்ளவே மணிகண்டன் நைசாக கழன்று கொண்டார். பிறகு நாங்கள் மட்டும் ஊர்வலத்தைத் தொடர்ந்தோம்.

விஷ்ணுபுரம் அரங்கில் ஜெயமோகனை சந்தித்தோம். அவரது சிறுகதைத் தொகுப்பான படையல் நூலில் அவரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அரங்கிற்கு வெளியே ஒரு காபி குடித்தோம். கிளம்பும் நேரத்தில் என்.ஸ்ரீராமைச் சந்தித்தோம்.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் சிறியதுதான். இன்னமும் நாட்கள் இருக்கின்றன, பார்த்துக் கொள்ளலாம்.

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

தேசாந்திரியோடு ஒரு புகைப்படம்

புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ரா தம்பதியினரோடு ஒரு புகைப்படம் எடுக்க நினைத்திருந்த போதும், வழக்கம் போல் மறந்துவிட்டோம். எனவே இன்று புத்தகக் கண்காட்சியில் தோழர் எஸ். ராவை தேசாந்திரி அரங்கில் கண்டு, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

கவலைக் கடலைக் கடியும் வடிவேல்

வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘நான் கண்ட நால்வர்’ எனும் நூலில் மகா கவியைப் பற்றி ‘கவிக்குலக் கோன்’ எனும் தலைப்பில் தான் கண்டும், கேட்டும் அறிந்த நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு நிகழ்ச்சி…

*********
பாரதியார், இனிமையான சாரீரம் படைத்தவரல்லர்; ஆனால் உணர்ச்சியோடு பாடுவார்; கேட்டுக் கொண்டிருக்கிறவர்களையும் உணர்ச்சி வசப்படுத்திவிடுவார். காரணம், அவர் உணர்ச்சிமயமாய் இருந்தார்.

பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாண சுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தை பெரிதும் கவர்ந்துவிட்டது. “முருகா, முருகா, முருகா” என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாகப் படிந்து, முருகனுடைய திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி, அதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.
*******
நாளை திருக்கார்த்திகைத் திருநாளில், குமரனின் புகழ்பாடும் பாடலைக் கேட்டு மகிழ, கனியின் குரலில் அப்பாடலை இன்றே கனி மியூசிக் வோர்ல்ட் சேனலில் ஏற்றியுள்ளோம்.

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

செல்லிடத்துக் காத்தல்

இன்று(டிச 10) மனித உரிமைகள் தினம். ஒரு மனிதன் மனிதனாகப் பிறந்ததனாலேயே அடையும் அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத உரிமைகளே மனித உரிமைகள் எனலாம்.

· உயிர் வாழும் உரிமை

· சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுவதற்கான உரிமை

· நீதி கோரும் உரிமை

· மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் உரிமை

· நடமாட்டத்திற்கான உரிமை

· சமமான வேலைக்கு சமமான ஊதியம் கோருதல்

· பாலியல் சமத்துவம்

· குழந்தைகள் நலம்

ஆகிய பல்வேறு அடிப்படை உரிமைகளின் தொகுப்பே மனித உரிமைகள். சட்ட அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளியென்று தீர்மானிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் என மனிதர்கள் எந்நிலையில் இருந்தாலும் மேற்சொன்ன உரிமைகள் அவர்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகளைப் பேணுவதில் இருக்கும் அடிப்படையான சிக்கலே இதில் பெறுனர் உதிரி மனிதனாகவோ அல்லது பலவீனமான கூட்டமாகவோ இருப்பதும், இவற்றை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் அரசு/சமூகம்/நிறுவனங்கள் போன்ற பலமான அமைப்புகள் இருப்பதும்தான். குறிப்பாக காவல் துறை, ராணுவம் போன்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளுக்கும் எளிய மனிதர்களுக்குமான ஊடாட்டங்கள் எல்லாமே மனித உரிமை மீறலுக்கான களமாக அமைந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது.

அதே நேரம் தனிமனிதர்களும் கூட்டமாகச் சேர்ந்து தாக்கத் துவங்கினாலும் அங்கும் மாட்டிக் கொள்ளும் பலவீனரின் உயிர், உடைமை, கண்ணியம் ஆகியவை காணாமல் போய் விடக் கூடும். திருடுகையில் மாட்டியவர்கள், திருடர்களாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகத்துக்கு உட்பட்டவர்கள் என எத்தனையோ உயிர்கள் இது போன்ற கூட்டு வீரத்தினால் பலியாகியுள்ளதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? தன் கோபம் செல்லுபடியாகக் கூடியவர்களிடம், எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருப்பவனிடம் வீரத்தைக் காட்டுவது இழுக்கு என்கிறது நம் தமிழ்மறை. ’செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான்’ எனும் குறளை மனிதர்கள் அனைவரும் பின்பற்றினாலே போதும், மனித உரிமை மீறல்கள் அற்ற சமுதாயம் உருவாகிவிடும்.

2024ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்திற்குரிய கருப்பொருளாக “நமது உரிமைகள், நமது எதிர்காலம் – இக்கணமே” என்பதனை ஐநா அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்திற்குரிய கருப்பொருளாக “நமது உரிமைகள், நமது எதிர்காலம் – இக்கணமே” என்பதனை ஐநா அறிவித்துள்ளது.

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

இசையெனும் இறை

கனியின் திரை நேரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் அந்த குறுகிய நேரத்திற்குள் அவன் எப்படியாவது சில அபூர்வ முத்துக்களை கண்டடைந்துவிடுவது வழக்கம். அப்படித்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘ஆரோக்கிய தாயே ஆதாரம் நீயே’ எனும் பாடலை கண்டெடுத்தான்.

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் பேராயர் சின்னப்பா அவர்கள் பாடிய பாடல் அது. அவன் உபயத்தில் அப்பாடலைக் கேட்ட எனக்கும் மனம் நெகிழ்ந்தது.

ஒரு பாடல் பிடித்துவிட்டால் திகட்டத் திகட்ட அதை மீண்டும் மீண்டும் கேட்டு, மனதில் பதித்துக் கொள்வது கனியின் வழக்கம். இந்தப் பாடலுக்கும் அதையே செய்யத் தொடங்கினான்.

இவ்வளவு தூரம் அவனை ஈர்த்த அந்தப் பாடலைப் பாடியவரிடமே அவனை அழைத்துப் போனால் என்ன என்று தோன்றியது. நெருக்கமான சில தோழர்களிடம் வழி கேட்டோம். அவர்களின் உதவியோடு,

பேராயரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டோம்.

இன்று மதியம் வரச் சொன்னார். நானும் கனியும் மட்டும்தான் சென்றிருந்தோம். அவரது உதவியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். சிறிது நேரத்தில் வயதினால் உடல் சற்று தளர்ந்தாலும், குன்றாத மன ஊக்கத்தோடு ஐயா அவர்கள் வந்தார்.

பேச ஆரம்பித்ததுதான் நான். பின்னர் இரு இசை ஆர்வலர்களும் அவர்களின் மொழியில் உரையாடியபடியே இருக்க, நான் ஆங்காங்கு சிற்சில மொழிபெயர்ப்பு வேலைகள் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

சிறியதொரு பிரார்த்தனையுடன் மதிய உணவிற்கு அமர்ந்தோம். அட்டகாசமான விருந்து.

வயிற்றுக்கு ஈயும் நேரத்திலும் ஐயாவும், கனியும் மாறி மாறி பாடிக் கொண்டும், சிலாகித்துக் கொண்டுமிருந்தார்கள்.

சாப்பிட்டு முடித்து மீண்டும் வரவேற்பரைக்கு வந்தபோது கனியிடம் கானடா ராகம் தெரியுமாப்பா என்றார் ஐயா.

இவன் அதற்கான ஆரோகண அவரோகணத்தைப் பாடியதும், அலைபாயுதே கண்ணா பாடுவியா, பாடேன் கேட்போம் என்றார். இவனுக்கு பாடல் வரிகளில் கொஞ்சம் ஐயமிருப்பினும், பாட ஆரம்பித்துவிட, அவரும் பாடலில் ஆங்காங்கு இணைந்து கொண்டார்.

கண்ணனும், ஏசுவுமாகிய மேய்ப்பர்கள் இருவருக்கும் பொதுவான பாலமாக கானடா ராகம் அங்கே பொங்கிப் பிரவாகித்தது. கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே நெகிழ்ந்துவிட்டிருந்தோம்.

கனியின் தலை தொட்டு ஆசிர்வதித்து, வேளாங்கண்ணி மாதாவின் அழகிய திருவுருவச் சிலை ஒன்றினையும் தந்ததோடு மீண்டும் வாருங்கள் என்று அன்புடன் சொல்லி வழியனுப்பினார் பேராயர்.

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment