மைனர் X

பள்ளம் மேடுகளால் நிரப்பப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் 20 Kmphல் பேருந்தின் கம்பிகள் நடுநடுங்க சென்று கொண்டிருந்தது தாழ் தள “சொகுசு” பேருந்து. அந்த பேருந்தில், ஒழுங்காக வேலை பார்த்தது, FM  ரேடியோ மட்டும் தான். யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை. அந்த பேருந்துக்கு அப்படி ஒரு பெயரை வைத்தவர் யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே, வழியில் வாங்கிய வேர்கடலையை விழுங்கி கொண்டிருந்தார், நம்ம ஹீரோ, மைனர் X . சரி, கிழக்கே இருக்கும் நிலங்கள் எல்லாம் இன்னும் செழிப்பாக இருக்கின்றனவா என்று. இந்த வருடம் அமோக விளைச்சல் இருக்கும் என தெரிந்தது. நினைக்க நினைக்க அவ்வளவு சந்தோசம் மைனருக்கு. அவர் நிலமானு கேட்குறிங்களா ? அப்படி எல்லாம் இல்லை. அந்த நிலங்கள் செழிப்பாக இருக்கும் போதே 4 இல்ல 5 ஏக்கர் வாங்கிடவேண்டும் என்ற மேன்மையான எண்ணம் மட்டுமே அவருடையது. 21 வயது வரை நல்ல வேளை கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே புரிந்தோ புரியாமலோ படிக்க சொன்னது எல்லாவற்றையும் படித்து , வேலையில்  சேர்ந்து, இப்பொழுது வாழ்வதற்கு ஒரு வீடும், வாடகைக்கு விட  நாலு வீடும் வாங்க துடிப்பவர். விவசாய நிலங்கள் இப்படி சதுர செவ்வக கட்டிடமாக மாறுவதை கண்டு Facebook  மற்றும் வலைபதிவில் அவ்வப்போது நினைத்து கண்ணீர் விடுபவர். போலீஸ் இல்லாத நேரங்களில் மட்டும் டிராபிக் விளக்குகளை மதிக்காத அண்ணா ஹசாரேவின் தீவிர தொண்டர். தமிழ் பெண்கள் தான் உலகத்தில் அழகு என்று மார் தட்டிக்கொள்ளும் தமன்னாவின் ரசிகர். மொத்தத்தில் ஒரு சராசரி தமிழ் இளைஞன். தினம் பார்க்கும் மனிதர்களின்(என்னையும் சேர்த்து தான்) கூட்டுகலவையே மைனர் X .

சரி கதைக்கு வருவோம். வேர்கடலை காலி ஆகியிருந்தது. தூரத்தில், மைனர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் டீ கடை தெரிந்தது. சட்டைக்குள் இருந்த தங்க சங்கிலியை எடுத்து வெளியில் போட்டுக் கொண்டார். பையில் இருந்த கூலிங் கிளாசை எடுத்து சட்டையில் மாட்டிக் கொண்டார். பேருந்து நின்று ஒரீரு நிமிடங்கள் தாமதித்து வெகு கோவமாக இறங்கினார் மைனர். பேருந்து நடத்துனர், முதலில் சில்லறை கொடுக்கவில்லை, டிக்கெட்டின் பின் எழுதிக் கொடுத்திருந்தார் இப்பொழுது சில்லரை கொடுக்கும் பொழுது, டிக்கெட்யை வாங்கியவர் சில்லரை கொடுத்தார், டிக்கெட்யை திரும்ப தரவில்லை. அதற்கு பதில் அதிகமாக இரண்டு ரூபாய் கொடுத்திருந்தார். மைனர் தான் அண்ணா ஹசாரே தொண்டர் ஆச்சே. விடுவாரா, சண்டை போட்டு, மேலும் இரண்டு ரூபாய் வாங்கிய பின்னரே இறங்கினார். 50-50 இல்லாவிட்டாலும் 70-30யாவது இருக்கவேண்டும் என்பது மைனரின் குறிக்கோள்.

மைனரின் கார் பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்தது. அவர் வீட்டில், ஒரு கார், ஒரு பைக், ஒரு TVS  50 மற்றும் ஒரு சைக்கிள் இருந்தன. அனால் ஓட்டுவதற்கு தான் ஆள் இல்லை. ஆள் இல்லாவிட்டால் என்ன, அந்தஸ்துநு ஒன்னு இருக்குல. வீட்டில் நாட்டு கோழி வெந்து கொண்டிருந்தது. மைனர் வெளியில் அசைவம் சாப்பிடுவது இல்லை. ப்ராய்லர் கோழி உடம்புக்கு கேடாம். எவ்வளவு காசு கொடுத்தாலும், மட்டனில் மாட்டு கரி கலந்து விடுகிறார்களாம். பாக்கெட்டில் பதிலை வைத்துக் கொண்டே சுத்துபவர் மைனர் X. அடுத்தா மூன்று நாட்கள் ஊரில் தான்.

திங்கள் இரவு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. ஊரில் இருந்து திரும்பி கொண்டிருந்தார் மைனர். அதே ஓட்டை பேருந்தில். மைனர் மிகவும் மாறி போயிருந்தார். மூணு நாள்ல,  என்ன மாற்றம் இருக்க முடியும் ? இருந்தன. போகும் பொழுது யாரோ ஒருவருடைய நிலமாக இருந்த அந்த வயல், இன்று அவருடையதாகியிருந்தது. பசித்தது. கூட்டம் அதிகம் இல்லாததால், இரவுக்கு பார்சல் செய்த உணவில் பாதி உண்ணலாம் என நினைத்து டிபன் பாக்ஸ்ஐ திறந்து பார்த்தார். வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எப்பொழுதும், மீன் குழம்பு இருக்கும். இன்று சப்பாத்தி இருந்தது. இங்கு இவர், விளை நிலங்களை வெறும் நிலங்களாக மாற்றி கொண்டிருந்த நேரத்தில், ஒரு அரசியல் வாதி, ஊருக்கு அருகில் இருந்த குளத்தை நிரப்பி, மனைகளாக மாற்றி கொண்டிருந்தான். பின்னணியில் FM ரேடியோவில்  தலைவர் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. “மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணிற்கு ஆசை. மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது  இதை மனம் தான் உணர மறுக்கிறது”. யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை.

 

செம்மொழி

முகபுத்தகத்தில் “My Reactions” என்று சின்ன சின்ன விசயத்திற்கும் ஒரு வடிவேலு படத்தை போடும் நண்பர்களில், யாரோ ஓரிருவர் பகிர்ந்திருந்தது தான் இந்த குறும்படம். பதுங்கி கிடந்த இதை இன்று தேடி பிடித்து பார்த்து முடித்தேன். காலேஜ் பசங்க ஒரு பெண் பின் சென்று பல்பு வாங்குவதையும், காதல் செய்வதையும் மையமாக வைத்து வரும் பல குறும்படங்களுக்கு மத்தியில் இது புதிதாகவும், அர்த்தமுடையவதாகவும் இருந்தது. நம் தாய்மொழியின் நிலையை தெளிவாக விளக்கியிருந்தனர். அமெரிக்காவில் நடப்பது போல் கதை சென்றாலும், தமிழ் நாட்டிலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. “பொன்னியின் செல்வன்” படித்துவிட்டு பரவச நிலையில், நண்பர்களிடம் பேசும் பொழுது, பெரும்பாலோனோர் சொன்னது “எனக்கு தமிழ் படிக்க ஒழுங்கா வராது மச்சி” என்பது தான். அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தமிழ் மக்களை கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக சந்தித்தது போல் இருக்கிறது.

“இவ்வளவு பேசுறியே, உன் தமிழ் வலைபதிவில் பதிவு போட்டு எவ்வளவு நாள் ஆகிவிட்டது, முடிஞ்சா அத பாரு” என்ற மனசாட்சியின் ஆணையின் விளைவே இந்த பதிவு. வரும் காலங்களில் தமிழிழும் அதிகம் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும். சரி படத்தை மறக்காமல் பாருங்கள்.

நண்பென்டா

சிங்கார சென்னைக்கு முதல் முறையாக  தனியாக சென்றேன், நண்பர்கள் இல்லாமல். ஞாயிறு அன்று பரீட்ச்சை, கடைசி பரீட்ச்சை. எப்படியாவது பாஸ் ஆகிவிடனும். ஆகிவிட்டால் வாழ்க்கையில் அடுத்து புத்தகம் எடுப்பதில்லை என்ற முடிவை எப்பொழுதோ எடுத்துவிட்டேன்.

நம்ம ட்ரெயின், எப்பொழுதும் போல, மிக சரியாக, குறிப்பிட்ட நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாகி சென்று கொண்டிருந்தது. கைப்பேசி ஒளித்தது. ட்ரெயின் வருவதற்கு முன்பே வந்து  காத்துக் கொண்டிருந்த என் நண்பண், சந்தோஷ். இறங்கியதும், அவனை பார்த்ததும் முகம் மலர்ந்தது. அதிகம் பேசாமல் ஹோட்டல் புகாரியை முற்றுகையிட்டோம். பல நாட்களுக்கு பிறகு நல்ல பிரியானி. பெங்களூரில் எவ்வளவு கொடுத்தாலும் நம்ம ஊர் பிரியானி கிடைப்பதில்லை. உரையாடலில் பிரியானி சென்ற இடம் தெரியவில்லை.

அடுத்த இலக்கு “எக்ஸ்பிரஸ் அவன்யு”. அழகாக இருந்தது, மேல் தளத்தில் இருந்த “எஸ்கேப்” திரையரங்கு பிரமிக்க  வைத்தது. அடுத்து அழகாக இருந்தது எதுவாக இருக்கும் ? அங்கு வந்த பெண்கள் தான். தனியாக சிலர், ஜோடியாக  பலர் என அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். வெயிலில் இருந்து கஷ்டபடாமல், நீட்டாக உள்ளே சென்று ACல் அமர்ந்து சைட் அடிக்கலாம்.  சந்தோஷ் அருகில் தான் இருந்தான், மறந்துவிடாதீர்கள், அடுத்து வருவதில் ஹீரோ வில்லன் எல்லாம் அவன் தான். ரொம்ப கடுப்பாக இருந்தான். தனியா சுத்துற எல்லா பசங்களுக்கும் இருக்கிறது தான், ஒன்னும் பண்ணமுடியாது. ஆரம்பித்தான், அது ஏன்டா நமக்கு மட்டும் ஒன்னும் சிக்கமாட்டேங்குது ? அங்க பாரு அவனுக்கெல்லாம் ஒரு ஆளு இருக்கு. சுட்டிய இடத்தை பார்த்தேன், சொல்றது கரெக்ட் தான்.  பல் இருக்கு பக்கோடா சாப்பிடுறான். குமுறலை தொடர்ந்தான். கேட்க வருத்தமாக இருந்தாலும், உள்ள ஒரு சந்தோஷம். பையன் நம்ம மாதிரி வெட்டியா தான் இருக்கான்னு 🙂 ஒரு மணி நேரத்திற்கு பிறகு பிரிந்தோம். மறுநாள் எனக்கு பரிட்ச்சை, அவனுடைய வேறு சில நண்பர்கள் வர இருப்பதால், மறுநாள் சந்திக்க வாய்ப்புகள் இல்லை என முடிவு செய்துவிட்டு கிளம்பினோம். சில நண்பர்கள் நான் இருப்பதையே மறந்துவிட்டபோது, சந்தோஷ் அவ்ளோ தூரம் வந்து சென்றது சந்தோசமாக இருந்தது.

மறுநாள் திருவான்மியூர்.  ஒன்னும் படிக்காமல் சென்று, ஏதோ தோன்றியதை கடமைக்கு எழுதிவிட்டு, அதை கொண்டாட நாரயணனும் நானும் அருகில் அசென்டாசில் உள்ள சரவண பவனிற்கு சென்றோம். தூரத்தில் ஒரு பெரிய உருவம் தெரிந்தது. அட, நம்ம சந்தோஷ். அருகில் கொஞ்சம் சிறிய சைசில் ஒரு பெண்.  ஆகா, ஒரு வருடத்திற்கு ஒரு முறை சென்னை வந்தாலும், கரெக்ட்டா நம்ம கண்ணுள வந்து சிக்குறானே இவன என்ன பண்றது.  சரி நம்மாள முடிஞ்சத செய்வோம் என நினைத்து கால் செய்தேன். அவன் என்னை பார்க்கவில்லை.

நான்: டேய், எல்லாம் ஓவர் டா, எங்கடா இருக்க ?

சந்தோஷ்: நான் இங்க தான்டா, திருவான்மியூர் பக்கம் இருக்கேன். நீ எங்க இருக்க ?

நான்: நானும் அங்க தான் இருக்கேன், பஸ் ஸ்டாண்ட் பக்கம், வரியா ?

சந்தோஷ்: இல்லடா…. நான் இங்க “அசென்டாஸ்”ல இருக்கேன்டா. பழைய கம்பெனில இருந்து பசங்க வநதிருக்காங்க.. அவங்களோட இருக்கேன்டா….

(ஆகா, வரேன்னு சொல்லிருந்தா கூட இவ்ளோ சந்தோஷ பட்டிறுக்க மாட்டேன். பழம் நழுவி பால், தேன் எல்லாவற்றிலும் விழுந்துவிட்டது. சாப்பிடுவதற்கு முன்பாகவே வயிறு நிரம்பிவிட்டது.)

நான்: சரி மச்சி அப்போ அப்புறம் பார்ப்போம். வரேன்டா

என்று சொல்லிவிட்டு, அதே ஹோட்டலில் நானும் ஆர்டர் செய்தேன். பயவுள்ள அப்பகூட பார்க்கல. பக்கத்துல பொண்ணு இருந்தாலே இப்படி தான். என்ன பண்றது சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினோம். ட்ரெயினில் பார்க் சென்று, அங்கிருந்து எஃமோர் செல்வதாக முடிவு. சரி போகும்போது என்ன சொல்றான்னு பார்க்கலாம்னு, மறுபடியும் ஒரு கால் செய்தேன்.

சந்தோஷ்: சொல்றா.

நான்: டேய், நான் இன்னும் அங்க தான்டா இருக்கேன். இங்க இருந்து எப்பிடிடா போறது, எஃமோருக்கு.

சந்தோஷ்: பஸ்ல போனா  லேட் ஆகும்டா. இரு சொல்றேன். (அருகில் இருந்த பெண், ரயிலில் போக சொல்வது தெளிவாக கேட்டது)

சந்தோஷ்: டேய், ட்ரெயின்ல போயிடுடா. அதுதான்டா இங்க பசங்களும் சொல்றாங்க. நீ பார்க் போய், எஃமோர் போனும்டா.

நான்: 🙂 🙂 🙂 சரிடா.

நண்பனுக்கு உதவனும்னு அவசரத்துல அந்த பொண்ணு பேசுறது கேட்குமேனு கூட தோனல. பாவம்.

சரி எஃமோருக்கு வெகமாகவே வந்துவிட்டேன். மீன்டும் ஒரு கால். பையன் தனியாக இருந்தான். வரமுடியாததற்கு கவலைபட்டான். அந்த பசங்கள இப்பதான்டா பர்ர்க்குறேன் ரொம்ப நாளுக்கு அப்பறம் என்றான். மைசூர்ல பார்த்ததுடா. அப்படியா என்றேன் 🙂 அவங்க விடல டா, சாரி டா என்றான். சரிடா என்றேன். கடைசி வரை புரியவில்லை அவனுக்கு.

எனக்கு வருத்தமும் இல்லை. சில நண்பர்கள் நான் இருப்பதையே மறந்துவிட்டபோது, சந்தோஷ் அவ்ளோ தூரம் வந்து சென்றதே போதும் என தோன்றியது. ஆனா எதுக்கு “எக்ஸ்பிரஸ் அவன்யு”ல வைச்சு ஒரு மணி நேரம் அவ்ளோ பிட்ட போட்டான். அது தான் புரியல 😦 😦

பின்குறிப்பு:  இக்கதையில் வந்த சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையோ கதையோ இல்ல. என்னை தெரிந்த நண்பர்கள் சந்தோஷ் யார் என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால், நல்லா ஒன்றுக்கு இருமுறை, பலார் பலார் என தன் கன்னங்களை அரைந்துவிட்டு, மேலும் ஒரு முறை பதிவை படிக்கவும்.

பீமின் டவுட்டு

காலை ஏழு மணி,  அதிகமில்லாத குளிரும், இதமான வெயிலுமாக நல்ல உறக்கத்தை கொடுத்தது, ரோட்டோரமாக  படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் நம்ம ஹீரோ பீம். அதி வேகமாக ஹாரன் சத்தத்துடன் சென்ற வேன் அவன் தூக்கத்தையும் கூடவே தூக்கிச் சென்றது. எழுந்து பார்த்தான், நிம்மி, நிக்கி, மினியின் ஸ்கூல் வேன். தூக்கம் கலையாத விளிகளுடன், ஏறி சென்றனர் குழந்தைகள்.  ஐயோ பாவம், 23 வயதில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இவர்களின் பெற்றோர் படுத்தும் பாடு. ஐந்து வயதில் என்னவெல்லாம் செய்கின்றனர், வாழ்க்கையை அனுபவிப்பதை தவிர, என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்த இரண்டு மணி நேரம் அவனுக்கு பிடிக்காத நேரம், தலை போகிற அவசரத்தில் அலுவலகம் செல்லும் நேரம். சற்று ஒதுக்குப் புரமாக சென்று பார்த்த்க் கொண்டிருந்தான்.  அலுவலகம் போகும் அவசரத்தில் யாருக்கும் நிற்காத வண்டிகள், ரோட்டரமாக கேட்பாரற்று கிடக்கும் இவனுக்காகவா நிற்க போகின்றன ? அலுவலகத்தில் என்னத்த சாதிப்பார்களோ, ஆனால் போகிற வேகத்தை பார்த்தால், ஏதோ கோட்டையை பிடிக்க போகிற மாதிரி தான் தெரியுது.  ஜம்மென்று பின்னாடி உட்கார்ந்து கேள்வி கேட்கும் மனைவிகளின் ஆர்பாட்டத்தை கேட்டுவிட்டு ரியாக்சன் கொடுக்காத கணவன்களின் வாகனங்கள், நான் நேர் கோட்டில் தான் செல்வேன் அதுக்குள்ள நீயும் வரக்கூடாது, நானும் வெளிய  வரமாட்டேன் என்று தனியே ஒட்டும் பெண்களும், அவர்களை முந்திச் சென்று வித்தைக் காட்டும் பசங்களும், இவர்களை மதிக்காமல் ரோட்டின் நடுவில் செல்லும் கார்களும், யாரையுமே மதிக்காமல் ரோடை அடைதுக் கொண்டு செல்லும் வேன்களும் லாரிகளுக்கும் தான் அடுத்த இரண்டு மணி நேரம் அந்த ரோடு சொந்தம், பீமுக்கு இல்லை.

ஆனால் பீமுக்கு பிறந்தநாளில் இருந்தே பெரும் சந்தேகம். ஏன் இப்படி ? எதற்காக இந்த ஓட்டம் ? வயிற்றுக்காக தானா ? ஏன் அவன் இல்லையா ?  அவன் வாழவில்லையா ? அவனுக்கு தெரிந்த அவன் நண்பர்கள் க்ளின்டன், புஷ், புடின் எல்லாம் இல்லையா.ஏன் தான் இவர்கள் இப்படி அலைகிறார்களோ என்று நினைத்துக் கொண்டான்.  பாவம், ஆண்டவன் இவர்களையும் தன்னை போல படைத்திருக்கலாம்.

அவனுக்காக சாப்பாடு வருவது தெரிந்தது. எதிர் வீட்டு மாமி, அவனுக்காக இட்லி கொண்டுவந்து கொண்டிருந்தாள். ஆம், க்ளின்டன், புஷ், புடின், பீம் என்ற அவள் தெருவில் இருக்கும் நாய்களில் அவளுக்கு பிடித்தது, பீம் தான். சூடான இட்லி சாப்பிட சென்றான் பீம், பாவம் அவனுக்கு எங்கே தெரிய போகிறது, மனிதனின் ஆசை பற்றி. அவனுக்கு தேவை ஒரு வேலை சாப்பாடு,  மனிதனுக்கு அப்படியா ? சொல்லுங்கள் மனிதர்களே !!!

சித்திர பாவை – அகிலன்

சில நாட்களுக்கு பிறகு மீன்டும் ஒரு தமிழ் நாவல். கல்கியின் நாவல்களான, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என சரித்திர கதைகளை படித்துவிட்டு, சரித்திர நாவல்கள் மட்டுமே என்ற முடிவில் இருந்தேன். ஆனால், மூத்த நண்பர்கள் சில பேர் கூறவே, சித்திர பாவை படிக்க முடிவு செய்தேன். அண்ணன்களின் அறிவுறை என்றும் தப்பாக போவதில்லை.

ஆரம்பம் முதலே அம்ர்க்களமாக இருந்தது. ஒவியக் கலையே உயிர் என்றும், எளிமையாக வாழ வேண்டும் என்ற என்னம் கொண்ட சில மனிதர்களையும், பணமே வாழ்க்கை என்றென்னி வாழ்பவர்களையும், அவர்களால் நல்லவர்களுக்கு வரும் கொடுமையையும் அழகாக சித்தரித்திருக்கிறார். ஓவியக் கலை எவ்வாறு அழிந்துக் கொண்டிருக்கிறது, நடுத்தர மக்களின் விபரீத ஆசைகள், அதன் விளைவுகள் என்ன என்பதை பல இடங்களில் சுட்டிகாட்டியிருக்கிறார்.

1970களில் எழுதப்பட்ட கதையாக இருந்தும், கதையில் வந்த அனைத்தும், இன்றும் அப்படியே பொருந்தும். கதையின் கரு,

“அழகாய் வாழக் கற்றுக் கொள்; முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு”.

இதை கதையில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்களின் உதவியோடு செம்மையாக் சொல்லி இருக்கிறார். அண்ணாமலையின் வாயிலாக ஒரு ஒவியக் கலைஞனின் வாழ்க்கை, ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தின் வழியாக ஒரு அழகிய பொறுமையான பெண்ணின் வாழ்க்கை, அதற்கு எதிர்மாறாக இருக்கும் சுந்தரியின் வாழ்க்கை, மாணிக்கம் என்னும் கதாபாத்திரத்தின் வழியாக பணவெறி பிடித்தால் என்ன ஆகும் என்றும் அழகாக எடுத்துறைத்துள்ளார். கதையின் நடுவே வரும் அறிவுரைகள் என்றென்றும் கடைபிடிக்க வேண்டியவை. முடிவில் அசுர வேகம், எதிர்பாரத சில திருப்பங்கள் இன்னும் கதையை வேகமாக நகர்த்தி செல்கின்றன.

சில நாட்களுக்கு பிறகு நல்ல புத்தகம் படித்ததில் திருப்தி.  படிகக வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

குடிமகனே குடிமகனே

9.15 பஸ்சை பிடிக்க அவசர அவசரமாக சிட்டி பஸ்சை பிடித்தேன். ஆகா கடைசி சீட் காலியாக் இருந்தது.  பஸ்ஸின் கடைசி சீட் என்றால் பிரச்சனை இல்லை, குடும்ப மக்கள் அதிகம் அண்டுவதில்லை, பஸ்சிலும் மனைவியை  பிரிய விருப்பமில்லாமல் தனியாக இருக்கும் பசங்களை எழுப்பிவிடும் கணவன்கள் பெரும்பாலும் வருவதில்லை, ஏதோ கடைசி சீட் என்றால் வேடிக்கை  பார்த்துக் கொண்டோ, ஊரையோ, நம்மையோ, இல்லை நேற்று ஆபீசில் பார்த்த் பெண்ணையோ பற்றி யோசித்துக் கொண்டு செல்லலாம் என்பது எண்ணம்.

ஆனால் அரசு பேருந்து என்றால் அவ்வளவு சொகுசாக இருக்குமா என்ன, அடுத்த நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தது இம்சை, இந்திய ‘குடி’மகனின் ரூபத்தில். கிக் ஏறிய சிங்கம் படக் என ஏறி அமந்தது, துரதஷ்ட்டவசமாக என் அருகில். சில மப்பு மன்னர்கள் கிக் ஏறிய உடனோ இல்லை பஸ் ஏறிய உடனோ மப்பு மற்றும் வாயின் உதவியோடு உலகையே திட்டி தீர்ப்பார்கள், ஆனால் இவரோ ஏறிய உடன், மட்டையாகிவிட்டார் என் தோழில். சில நேரம் பொறுத்து பார்த்தேன், ஒன்றும் சரிபட்டு வராமல் போக செயலில் இறங்கினேன். ரனகலமா எதுவும் எதிர்பார்க்காதீங்க, ஒரு சீட்டு தள்ளி உட்கார்ந்தேன்.

இதை எப்படியோ பார்த்த குடிமகன், கால்களை நீட்டி படுக்க முயற்சித்து, இட பற்றாற்குறை காரணத்தால், தன் காலை அந்த மூலையில் இருந்தவரின் மேல் போட்டுநீட்டி நிமிர்ந்து படுத்தார். வேறு வழி இல்லாமல் அவர் இடம்பெயர்ந்தார். அடுத்து இடைஞ்சலாக இருந்தது நான். தலையை வைத்து முட்ட ஆரம்பித்த்வுடன் நானும் எழுந்து முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்தேன். கடைசி சீட்டில் கிடைத்த் களிப்பில் மெத்தையில் படுப்பது போல் படுத்து தூங்க ஆரம்பித்தார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்டக்ட்டர் சும்மா இருப்பாரா ? அப்படியே ஷாக் ஆயிட்டாரு.  “டிக்கெட் எடுத்தான சார் இவன் ? எங்க ஏறினான் ? ” என கேள்வி கனைகளை தொடுத்தார். டிக்கெட் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தபின், மயங்கி கிடக்கும் குடிமகனிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். கண்டக்டரின் நம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். அடித்து எழுப்பி பார்த்தார், போலீஸ் என்று மிரட்டி பார்த்தார், ஒன்னும் வழியில்லை. விடாமுயற்சியினால் எப்படியோ எழுப்பிவிட்டார். டிக்கெட் வாங்க முடிவு செய்த குடிமகன், 200 ருபாயை எடுத்துக்  கொடுத்தார் 7 ருபாய் டிக்கெட்டுக்கு, திரும்பவும் கும்மென்று தூங்க ஆரம்பித்தார். பாவம் கண்டக்டர், டிக்கெட் கொடுத்துவிட்டு, சில்லரையை பாக்கெட்டில் புகுத்திவிட்டு நான்கு ஐந்து நல்ல வார்த்தைகளால் வாழ்த்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் நான் இறங்கிவிட்டேன். குடிமகனுக்கு என்ன ஆனது தெரியவில்லை, கண்டக்டரின் கோபத்தை பார்த்தால் ஒன்று அடித்து இறக்கிவிட்டிடுப்பார் அல்லது போலீசிடம் ஒப்படைத்திருக்கலாம்.

அடுத்த நாள், ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு குடிமகன், வயிறு முட்ட குடித்துவிட்டு ரோட்டோரமாக சொர்க்கத்தில் தூங்குவது போன்று தூங்கி கொண்டிருந்தார்… அருகில் ஒருவர் அமர்ந்து அவரை எழுப்பவது போல் இருந்தது. உற்று பார்த்தவுடன் தெரிந்தது அருகில் இருப்பவர் எழுப்பவில்லை, குடிமகனின் பாக்கெட்டில் இருந்த அனைத்தையும் தன் பாக்கெட்டிற்கு மாற்றி கொண்டிருந்தார். அருகே 20 அல்லது 30 பேர் இருந்ததும் அவர் செய்வதை பார்த்தும் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. மொழி தெரியாத ஊரில் பிழைக்க வந்த ஊரில் வம்பெதற்கு என்று நானும் கண்டுக்கொள்ளவில்லை.

சரி சரி, மொக்கை போதும், ஒவ்வொரு ஊரிலும் தினமும் காணும் காட்சி தான், ஆனால் டவுட் என்னவென்றால், குடிக்கிறது குடிக்கிறாங்க கொஞ்சம் அளவா குடிக்கலாமே.

ஒவ்வொரு முறை இப்படி பட்ட மக்களை பார்க்கும் போது, மனதில் நிற்பது ஒன்று தான், மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்தும் புத்தி ஒருபொழுதும் தண்ணியால் அளித்துவிட கூடாது என்பது தான்.

கற்பனைக் கோட்டை

காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து. தலையில் விழுந்த குட்டு தாங்க முடியாமல் அலாரம் வாயை மூடிக் கொண்டது. தூங்கவும் முடியாமல், தூக்கத்திலிருந்து எழவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தான் அவன், கதையின் கதாநாயகன். அலாரம் உதவுவதைவிட அவனுக்கு அதிகமாக உதவுவது ஒவ்வொரு நாளும்  இருக்கும் மீட்டிங் தான். அன்றும் இருந்தது 9.30க்கு.

அதிவேகமாக கிளம்பினாலும், அலுவலகம் செல்ல நேரமாகிவிடும் போல் இருந்ததால், ஆட்டோவின் உதவியை நாடினான். 2 கிலோமீட்ட்ருக்கு 50 ருபாய், கேட்டான். “என்னனே இவ்ளோ  ?” என்றதற்கு, “அங்க திரும்ப சவாரி கிடைக்காது சார், சாப்ட்வேர் இஞ்சினியர் நீங்களே இப்படி சொல்லலாமா ?” என்பது தான் பதில். ஆனால் அவன் ஆட்டோவில் செல்லவில்லை. அட்டோகாரன் அதிகம் கேட்டாலும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் காரணம், காய்கறி விலை கூடினாலும் அவர்களே தான் காரணம். இவ்வளவு நாள் அரசு ஊழியர்கள் இப்பொழுதோ சாப்ட்வேர்  இன்ஜினியர்கள், மக்களுக்கு குறை சொல்ல யாராவது இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எப்படியோ கம்பெனிக்கு 9.31கு சென்றுவிட்டான். 11.00 க்கு மீட்டங் சுபமாக முடிந்தது. இருந்தாலும் அவன் மேனேஜர் முகம் மட்டும் உர் என ஏன் இருந்தது என புரியவில்லை.

கையில் காபியுடன் அவுட்லுக்குள் லுக்கை செலுத்தினான். தேவையில்லாத மெயில்களுக்கு நடுவே இருந்தது, அவன் மேனேஜரின் மெயில். நேற்று அவன் செய்வதாக சொல்லி இருந்த 10 விஷயங்களில், ஒன்று முடிக்கவில்லை என்றும் அது ஏன் என்றும், இவ்வாறு வேலை செய்தால் உருப்படாது என்பது போலவும் இருந்தது மெயில். இது வழக்கம் தான், எவ்வளவு செய்தாலும் தவறுகள் மட்டுமே தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். அது எப்படி என்பது இதுவரை அவனுக்கு புரிந்ததில்லை. ஆனால் அவரின் மெயில் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கோபம் மட்டும் எரிமலை போல பொங்கி அடங்கும், வேலையின் மீது வெறுப்பு வரும், மேனேஜர் மீது கோபம் வரும். அவனால் முடிந்தது அவ்வளவு தான்.

அடுத்து வேலையில் மூழ்கினான். பிரேசில் கஸ்டமர் கேட்ட விடைகளுக்கு தெளிவாக பதில் அளித்தான். பாவம் அவர்கள் கணக்கில்லாமல் செலவழித்துவிட்டு விடைக்காக நிற்பவர்கள், அவர்களை அவன் என்றும் நிற்க வைப்பதில்லை. அடுத்து ஒரு மணிக்கு சாப்பாடு. சாப்பாடின் வாசனை மட்டுமே போதும் அவனுக்கு, அதற்கு மேல் சாப்பிட தோன்றுவதே இல்லை. ஏன் என்று அவனுக்கும் தெரிந்ததில்லை. பதார்த்தங்களின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும் தினமும், லக் இருந்தால் புழு பூச்சியை சாப்பாட்டில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும், அவ்வளவு தான். என்ன செய்வது. கம்ப்ளெய்ன்ட் செய்தால் வேறு ஒரு ஹோட்டல்காரன் வருவான், ஒரு வாரம் நன்றாக இருக்கும், அடுத்த வாரம் அதே கதை தான்.

சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். நேரம் முடிந்துக் கொண்டே இருந்தது, வேலை இருந்துக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு  ஃபோன் செய்தான். பக்கத்து வீட்டு ஆண்டியும் இருந்தார்கள் வீட்டில். ஆண்டியுடன் பேச வேண்டிய சூழ்நிலை. அவர்களோடு  அதிகமாக் பேச விரும்புவதில்லை, இருந்தாலும் மாட்டிக் கொண்டான் இன்று,

“என்னப்பா எப்படி போகுது வேலை ? ”

“நல்லா போது, ஒன்னும் பிரச்சனை இல்ல”.

“எல்லாம் டவுனுனு கேள்விப்பட்டேன்” (பார்க்கும்போது எல்லாம் இதே கேள்வி தான்).

“ஆமாஆன்டி, எங்க டீம்ல பிரச்சனை இல்ல”

“சரிப்பா மணி கூட சொல்லிட்டே இருந்தான்,சாப்ட்வேர் அவ்வளவு தான், அப்படினு, இது நிலைக்காதுபா, தெரிஞ்சு தான் நாங்க மெக்கானிக்கல் எடுத்தோம்” (தெரிஞ்சா எடுத்தீங்க, cs இல்லைனுல எடுத்தீங்கனு சொன்னா ஒத்துக்கவா போறீங்க ?)

“சரிப்பா உடம்ப பார்த்துக்கோ”

எல்லா வேலையும் முடிச்சுட்டு வர இரவு பன்னிரெண்டு, பெர்சனல் மெயிலை புரட்டிவிட்டு சில வேலைகளை முடித்துவிட்டு படுக்க 2. காலேஜ் நினைவுகள் கண் முன் வந்து நின்றன. சாப்ட்வேர் இஞ்சினியர் பற்றி அவனுக்கு அதுவரை தெரிந்தது எல்லாம், மனசுக்கு பிடித்த வேலை, கம்பெனி முழுவதும் அழகான பொண்ணுக, கை நிறைய சம்பளம், எதையும் வாங்க முடியும் சம்பளம், அவ்வளவு தான். வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது, அப்படி இல்லை என்று. அதுவும் நம்ம தமிழ் படங்கள்  “கற்றது தமிழ்”, “அறை எண் 305ல் கடவுள்” எல்லாம் பார்த்தா அவ்வளவு தான். கற்றது தமிழில் காமிச்சது போல அறைக் குறை ஆடைகலுடனும் யாரும் வருவதில்லை, “அறை எண்” படத்தில் காட்டியது போல சும்மா சம்பளம் கொடுப்பதில்லை. ஏன் இவ்வளவு கேவலமாக படங்களில் காட்ட வேண்டும் என்று நினைத்த போது கோபம் வந்தது.  கஷ்டப்பட்டு மானத்தோடு உழைத்து வாழ்வதை இப்படி சித்தரிக்கிறார்களே என்று நினைக்கும் போது  கோபம் உச்சியைத் தொட்டது. அதுவும் இதை சொல்வது யார் என்றால், பெண்களை அறைக் குறை ஆடைகளுடன் ஆடவைத்து காதலை வத்து காமெடி பண்ணி காசு சம்பாதிக்கும் கோஷ்டி. “என்ன கொடுமை சரவணன் இது” என நினைத்துக் கொண்டான். அவன் காலேஜில் கட்டி வைத்திருந்த கற்பனை கோட்டை மெதுமெதுவாக தகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மக்க்ளின் கற்பனையோ எல்லை இல்லாமல் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு நினைத்துக் கொண்டே தூங்கி போனான். காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து.

விருப்பமில்லாத இடைவெளி

ஒரு மாதத்திற்கு மேலே ஆகிவிட்டது, இந்த வலைபதிவில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் பதிவு செய்து. அதுக்காக ஏதோ பெருசா இருக்குனு நினைக்காதீங்க. வழக்கம் போல மொக்கை தான். சரி இரண்டு மாசமா என்ன நடந்சுச்சுனு யோசிச்சுப் பார்த்தேன். இரண்டு படம், இரண்டு  டூரு,  இரண்டு  குட்டி கதையும் கவிதையும் மனசுல தோன்றி, சோம்பேறி தனத்தால பதிவு செய்யாம, சின்ன மூலைக்குள்ள் ஒரு ஓரத்துல இருக்கு, அத மெதுவா தூசித் தட்டி, பெயர் வைச்சு, பதிவு செய்யனும். அத கூடிய சீக்கிரத்துல செய்வேன் அப்படினு சொல்றதுக்கு தான் இப்ப இந்த பதிவு. ஒகே ஒகே கூல் டவுன்.

சரி நான் போன சுற்றுலாக்கள் மற்றும் படங்கள் பற்றிய தகவல்கள் ஆங்கில வலைபதிவுல இருக்கு. தமிழ்ல அடிக்க நேரம் கிடைக்கல. இனிமேலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி தமிழ் வலைப்பதிவுல ஏதாவது அடிக்கனும். பார்ப்போம் நம்ம நினைக்குறது ஏதாவது நடக்குதானு.

வெண்ணிலா கபடி குழு

சொல்ல்வா வேண்டாமா ? ஏற்கனவே பல பேர் சொல்லிருப்பாங்க நாமும் சொல்லனுமா ? தேவையா ?  இப்படி எல்லாம் யோசிச்சேன். சரி கடைசியா ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு படம் பார்க்குறோம் எதுக்கு அத பத்தி சொல்லாம இருக்கனும் நினைச்சு சொல்றேன்.  சில காலமாகவே படம் எதுவும் பார்க்கவில்லை. அபியும் நானும், பூ என ஏகப்பட்ட படங்கள் விட்டு போனதில் வருத்தம். ஹோலிக்காக மார்ச் 11, புதன்கிழமை கம்பெனி லீவ், அதுவும் எங்க கம்பெனி மட்டும் லீவு. சரி வெண்ணிலா கபடி குழு படத்துக்கு போவோம் என முடிவு செய்தோம். புதன்கிழமை தியேட்டரில் எங்களையும் ஒரு பத்து ஜோடிகளையும் தவிர கூட்டம் இல்லை. படம் பார்க்க சென்றவர்கள் நாங்கள் மூவர் மட்டும் என்று தான் நினைக்கிறேன். படத்தில் பெயர் போடும் போது பார்த்தால், அறிமுகம் என்றே ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தனர். ஆனால் படம் நன்றாக தான் இருந்தது, ரொம்ப நல்லாவே இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் படம் குதூகலமாக சென்றது. படம்போன வேகமே தெரியவில்லை. வசனங்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் நடிப்பு நன்றாக தான் இருந்தது. சரண்யா மோகன் மிக குறைந்த நேரமே வந்தாலும் நினைவில் நிற்கிறார். சென்னை 28 மாதிரியே கதை இருக்கிறதோ என்று ஒரு டவுட் வருகிறது. கடைசியில் படத்தில் ஒரு ட்விஸ்ட். அங்க கொண்டு போய் எதுக்கு அந்த டுவிஸ்டுனு இயக்குனருக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் படம் சூப்பர், பார்க்கலேனா பாருங்க.

நான் கடவுள் – விமர்சனம்

காலை ஆறு மணிக்கு நான்கு அலாரங்கள் அடிக்க, அவசர அவசரமாக கிளம்பி காலையில் வயிற்றுக்கு எதுவும் உண்ணக் கொடுக்காமல், ஓடி சென்று தியேட்டரில் உட்கார்ந்தோம். அன்று பரீட்சைக்கு காட்டும் அக்கறையை விட இன்று படத்துக்குக் காட்டும் அக்கறைத்தான் அ திகம். படத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள். சில இடங்களில் கொஞ்சம் கொடுரமாக இருக்கும் என்று தான் எண்ணினோம். ஆனால் படம் முழுதுமே அப்படி தான் இருந்தது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியதே கதை. அகோரி சாமி வேடத்தில் வரும் ஆர்யா வருவது சில நேரம் தான். மற்ற நேரங்களில் பூஜாவும் அவளோடு வில்லன்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் மக்களும் தான் வருகின்றனர். அவ்ர்கள் நடிப்பும் புகழும்படியாகவே இருந்தது. பூஜா மற்றும் அவர்களது நடிப்பை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும். பூஜாவுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஆர்யா வருவதோ சில காட்சிகள் தான் என இருக்க அவர் எதற்கு மூன்று ஆண்டுகள் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர். பாலா மிக மிக  தத்ரூபமாக எடுக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டதாக தோன்றுகிறது. சில இடங்களில் நம்மை நெகிழ வைப்பதற்கு பதிலாக் நெளிய வைக்கிறது. கடைசி காட்சியில் பூஜாவின் நடிப்பு அபாரம், ஆர்யாவின் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது, பாலாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆனால் படத்தில் ஒரு முழுமை இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் எனக்கு படம் பிடிக்கவில்லை.

Design a site like this with WordPress.com
தொடங்கவும்